மகாராஷ்டிரா , ஜூன் 26 : சமீபத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய் பல்வேறு முக்கியத் திட்டங்களை அறிவித்தார். அதில் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், ‘மாவட்டம் தோறும் போதைப்பொருள் தடுப்புப்படை’ (Anti-Narcotics Task Force – ANTF) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இந்தத் தனிப்பிரிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக முழு அளவில் துவக்கப்படாத நிலையிலும் இதற்கென பிரத்யேகமாகக் காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தங்களது களப்பணியைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் சென்னை கீழ்பாக்கம் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்படையினர் கடந்த 20-ஆம் தேதி தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சங்கீதா, சிரஞ்சீவி மற்றும் ஜான் ஆகிய மூவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 30 கிராம் மெத்தாம்பேட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் மற்றும் 10 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சங்கிலித்தொடர் விவகாரத்தில் முக்கியப் புள்ளியாகக் கருதப்படுபவர் கைது செய்யப்பட்ட சங்கீதாவின் கணவரான சண்முகம். சங்கீதா பிடிபட்டதில் இருந்தே சண்முகம் போலீசாரின் வளையத்தில் சிக்காமல் தொடர்ச்சியாகத் தலைமறைவாக இருந்து வந்தார். இவரைப் பிடிப்பதற்காகக் கீழ்பாக்கம் காவல் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சண்முகத்தின் கார் பதிவு எண் மற்றும் அவரது மொபைல் எண் ஆகியவற்றைத் தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படுத்தித் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சண்முகத்தின் கார் மற்றும் மொபைல் சிக்னல் ஆகியவை மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே (பூஞ்ச்) பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைச் சென்னை போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் துல்லியமாகக் கண்டறிந்தனர். உடனடியாகச் செயல்பட்ட கீழ்பாக்கம் போதைப்பொருள் தடுப்பிரிவு அதிகாரிகள், மகாராஷ்டிர மாநில போலீசாருக்குச் சண்முகத்தின் நடமாட்டம் மற்றும் வாகன விவரங்கள் குறித்த ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டனர்.
அதன் அடிப்படையில், மகாராஷ்டிர மாநிலப் போலீசார் புனே பகுதியில் சண்முகத்தை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இத்தகவல் சென்னை காவல்துறைக்கு உடனே முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மகாராஷ்டிர மாநிலத்திற்கு விரைந்து சென்ற கீழ்பாக்கம் காவல் மாவட்ட போதைப்பொருள் தடுப்பிரிவு போலீசார், அங்குப் பிடிபட்ட சண்முகத்தைத் தங்களது பாதுகாப்பில் எடுத்துச் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சண்முகத்திடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெரும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவரிடமிருந்து சுமார் 350 கிராம் மெத்தாம்பேட்டமைன், 5 கிராம் எம்.டி.எம்.ஏ (MDMA), எல்.எஸ்.டி (LSD) ஸ்டாம்புகள் மற்றும் 50 கிராம் உயர்ரக ‘ஓஜி கஞ்சா’ உள்ளிட்ட சர்வதேசச் சந்தையில் மிக அதிக மதிப்புடைய உயர்ரகப் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சண்முகம் சொந்தமாகத் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவது தெரியவந்தது. தொழில் நிமித்தமாக அவர் அடிக்கடி பெங்களூருக்குச் சென்று வந்துள்ளார். அவ்வாறு பெங்களூர் சென்றபோது அங்கிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் சண்முகத்திற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் தொடர்பைப் பயன்படுத்தி அவர்களிடம் இருந்து பெருமளவில் உயர்ரகப் போதைப்பொருட்களைக் கொள்முதல் செய்து சென்னைக்குக் கடத்தி வந்து இங்குள்ள சில்லறை விற்பனையாளர்கள் மூலம் சண்முகம் விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சண்முகத்திடம் போதைப்பொருள் தடுப்புப்படை (ANTF) போலீசார் தங்களது தீவிர விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகள் முடிந்ததைத் தொடர்ந்து சண்முகத்தை வேப்பேரி காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப்படையினர் ஒப்படைத்தனர். வேப்பேரி போலீசார் இது தொடர்பாக முறைப்படி வழக்குப்பதிவு செய்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரைச் சிறையில் அடைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் புதிதாகப் போதைப்பொருள் தடுப்புப்படை உருவாக்கப்பட்டு களத்தில் இறங்கிய பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள மிக முக்கியமான முதல் கைது நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் விற்பனைக் கும்பல்களின் பின்னணியைக் கண்டறிந்து அவர்களைக் கூண்டோடு ஒழிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இந்த ஏ.என்.டி.எஃப் (ANTF) தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுவார்கள் எனத் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .





