திருப்பூரில் இரவு ஆனால் தீக்காடாகும் குடியிருப்பு பகுதி? “தூங்கவே முடியல” என கதறும் பொதுமக்கள்

திருப்பூரில் தினமும் இரவு குப்பை கழிவுகள் எரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. புகை காரணமாக மக்கள் அவதி, தொழிற்சாலை ஊழியர் மயக்கம்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நொய்யல் பாலம் சாலை அருகே உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் குப்பை மற்றும் தொழிற் கழிவுகள் எரிக்கப்படுவதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். “இரவானாலே பயம், நிம்மதியா தூங்க முடியல” என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

நடராஜா தியேட்டர் பின்புறம் அமைந்துள்ள புதிய நொய்யல் பாலம் சாலை பகுதியில் லாரி லாரியாக கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவதாகவும், பின்னர் அவற்றிற்கு தினமும் இரவு தீ வைக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூரில் இரவு நேர புகை பிரச்சனை தீவிரம்

அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், “மாநகராட்சிக்கு பலமுறை புகார் கொடுத்திருக்கிறோம். அதிகாரிகள் வந்து பார்த்து செல்வதோடு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மாலை 6 மணி ஆனாலே தீ வைத்துவிட்டு செல்கிறார்கள். இரவு முழுக்க புகை சூழ்ந்து கிடக்கிறது” என்று குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து எரிக்கப்படும் கழிவுகளால் புகை அதிகரித்து, மூச்சுத்திணறல், தொண்டை எரிச்சல், கண் எரிச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் கூட புகை காரணமாக நீண்ட நேரம் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொழிற்சாலை ஊழியர் மயக்கம்.. பதற்றமான சூழல்

இந்த புகை பிரச்சனையின் தாக்கம் தற்போது உடல்நல பாதிப்பாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சம்பவம் குறித்து பேசிய தொழிற்சாலை நிர்வாகி சம்பத்குமார், “தீ வைத்த புகையால் எங்கள் தொழிற்சாலையில் வேலை பார்த்த ஒரு இளைஞர் மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இது ஒரு நாளைய பிரச்சனை இல்ல, தினமும் நடக்குது” என வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், “நாங்களே இரவு நேரங்களில் இங்கே தங்கி கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எப்போது தீ பரவுமோ என்ற அச்சத்தில்தான் இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

தீயணைப்பு துறையினருக்கும் சிக்கல்?

பொதுமக்கள் கூறுவதன்படி, இந்த பிரச்சனை குறித்து பலமுறை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் “இது குப்பை எரிப்பு சம்பவம் என்பதால் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் எந்த துறையை அணுகுவது என்ற குழப்பத்திலும் மக்கள் உள்ளதாக தெரிகிறது. “எங்கு போய் புகார் கொடுக்கணும் என்பதே தெரியல” என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி மீது மக்கள் எதிர்பார்ப்பு

இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் கழிவுகளை கொட்டிவிட்டு எரிக்கும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

பொதுமக்கள் பகிர்ந்துள்ள வீடியோ மற்றும் புகார்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாநகராட்சி இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது கவனிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »