தமிழக அரசியலில் புதிய பரபரப்பு. திமுக – அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததாக அருண்ராஜ் குற்றச்சாட்டு. ஆளுநர் நடவடிக்கையையும் TVK விமர்சனம் செய்தது.

தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அருண்ராஜ் அளித்த பேட்டி தற்போது தீவிர கவனம் பெற்றுள்ளது. ஆளுநரின் நடவடிக்கை, ஆதரவு கோரும் அரசியல் நகர்வுகள், திமுக – அதிமுக கூட்டணி தொடர்பான சந்தேகங்கள் என பல முக்கிய விஷயங்களை அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேசிய கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அருண்ராஜ் தெரிவித்தார். “நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். நல்லது நடக்கும்” என்ற அவரது பதில், அரசியல் வட்டாரத்தில் புதிய கணக்குகளை உருவாக்கியுள்ளது.
ஆளுநர் நடவடிக்கையை TVK எப்படி பார்க்கிறது?
ஆளுநரின் தாமதமான நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்டபோது, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டியது அவசியம் என அருண்ராஜ் கூறினார். “Single Largest Party ஆக இருக்கும் தமிழக வெற்றி கழகத்தை அழைக்க வேண்டியது அரசியலமைப்பு நடைமுறை” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அரசியல் அழுத்தத்தை TVK தரப்பு வெளிப்படையாக பதிவு செய்துள்ளது.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆளுநர் தாமதப்படுத்தினால் நீதிமன்றத்தை அணுகுவீர்களா என்ற கேள்விக்கும் அருண்ராஜ் மறைமுக பதில் அளித்தார். “ஒரு சட்டபூர்வமான விஷயத்தை சில நாட்கள் தள்ளிப் போடலாம். ஆனால் தடுக்க முடியாது. நீதி கண்டிப்பாக வெல்லும்” என்ற அவரது வார்த்தைகள், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதே நேரத்தில், “எங்கள் தலைவர் உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பார்” என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக – அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா?
இந்த பேட்டியின் மிகப்பெரிய அரசியல் பரபரப்பை உருவாக்கிய பகுதி இதுதான். அவர் குறிப்பிட்டதாவது, “மக்கள் கொடுத்த தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்கு இந்த இரண்டு கட்சிகளும் திட்டமிட்டிருக்கின்றன. சிலர் அதை தடுத்திருக்கலாம். ஆனால் முயற்சி நடந்தது உண்மை” என்று கூறினார்.
மேலும், OPS தொடர்பாகவும் அவர் மறைமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்” என அவர் கூறியது அரசியல் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
TVK மீது சதி நடந்ததாக குற்றச்சாட்டு
தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றி கழகத்தையும் அதன் தலைவரையும் குறிவைத்து திட்டமிட்ட சதி நடந்ததாகவும் “அதை மீறித்தான் இன்று தமிழகத்தில் ஒரு பெரிய சக்தியாக நாங்கள் வளர்ந்திருக்கிறோம். இது தலைவருக்கு புதுசல்ல” என்ற அவரது கருத்து, TVK தனது அரசியல் நிலைப்பாட்டை ‘மக்கள் ஆதரவால் வந்த மாற்று சக்தி’ என கட்டமைக்க முயற்சிப்பதை காட்டுகிறது.
அதே நேரத்தில், BJP குறித்து பிற கட்சிகள் நேரடியாக குற்றம்சாட்டிய நிலையில், TVK இதுவரை அமைதியாக இருப்பது குறித்த கேள்விக்கும் அவர் “உரிய நேரத்தில் அனைத்தையும் சொல்வோம்” என பதிலளித்தார்.






