நெல்லை , ஜூன் 11: நெல்லை அருகே பழுதடைந்த சாலையிலிருந்த குழியால் ஏற்பட்ட பைக் விபத்தில், காரின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் பத்தமடை பகுதியைச் சேர்ந்தவர் சேக் மைதீன். இவர் தனது மனைவியுடன் ஒன்றரை வயதான பெண் குழந்தை ரெசிமாவை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பத்தமடையிலிருந்து நெல்லை நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
அவர்கள் நெல்லை – தென்காசி நெடுஞ்சாலையில் கருங்குளம் பகுதி அருகே வந்துகொண்டிருந்தபோது சாலையில் இருந்த மிகப்பெரிய குழி ஒன்றில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இறங்கியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலைதடுமாறி சரிந்தது. இந்த விபத்தின்போது தாயின் கையில் இருந்த குழந்தை ரெசிமா தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தது.
Also read : மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்க வாய்ப்பில்லை: நீர்வளத்துறை தகவல் ! காரணம் ??
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டு சிறை
ஓட்டுநருக்கு ரூ.3.5 லட்சம் வட்டி: அதிகாரிகள் சம்பளத்தில் பிடிக்க கோர்ட் உத்தரவு
திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம் : வீட்டைச் சுத்தம் செய்த இளம் வழக்கறிஞர் பலி
அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் அதிவேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று சாலையில் விழுந்த குழந்தை ரெசிமாவின் மீது எதிர்பாராதவிதமாக ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தைக் கண்டு குழந்தையை இழந்த பெற்றோர் சம்பவ இடத்திலேயே கதறித் துடித்தது பார்ப்போரை கண்கலங்கச் செய்தது.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும் கருங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து திரண்டனர். தொடர்ந்து பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்காமல் அலட்சியமாக இருந்த நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து அவர்கள் திடீரென நெல்லை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை – தென்காசி சாலையில் நீண்ட நாட்களாகவே குண்டும்குழியுமான அவலநிலை நீடித்து வருவதாகவும் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டினர். நெடுஞ்சாலைத் துறையின் இந்த அலட்சியப் போக்கினாலேயே தற்போது ஒரு பிஞ்சு உயிர் பறிபோயுள்ளதாக அவர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.







