நெல்லை , ஜூன் 11 : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020 ம் ஆண்டு நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் பெற்றோருடன் கிறிஸ்தவ சபை கூட்டத்திற்கு வந்திருந்த 7 வயது சிறுமிக்கு 59 வயதான மத போதகரான செல்வராஜ், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்கள் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் செல்வராஜ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்றைய காலகட்டத்தில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய சாந்தி இந்த வழக்கின் புலன் விசாரணையைத் தீவிரமாக மேற்கொண்டு குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றவாளி செல்வராஜ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் இன்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை வாசித்தார்.
அவரது தீர்ப்பின்படி, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த செல்வராஜுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் இத்தகைய தீவிர மற்றும் தொடர் சட்ட நடவடிக்கைகளால், இந்த 2026ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 12 போக்ஸோ வழக்குகளில் தொடர்புடைய 12 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.







