கள்ளக்குறிச்சி , ஜூன் 13: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வெறும் 2,500 ரூபாய் பணத் தகராறில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் 50 அடி ஆழப் பள்ளத்தில் வீசப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாயமாகி 18 நாட்களுக்குப் பிறகு கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து அந்தப் பெண்ணின் சடலத்தைக் காவல்துறையினர் தற்போது மீட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கராபுரம் அருகே பொய்க்குணம் செல்லும் சாலையில் வசித்து வந்த பாஸ்கரன் என்பவரின் மனைவி அலமேலு. இவர் கடந்த மே மாதம் 23ஆம் தேதி முதல் திடீரெனக் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன், மே 24ஆம் தேதி சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அலமேலு காணாமல் போன பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காவல்துறையினரின் விசாரணை ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜப்பன் என்பவர் திடீரென சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி சரணடைந்தார். காணாமல் போன அலமேலுவை தானே கொலை செய்ததாக அவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ராஜப்பனைக் காவலில் எடுத்த காவல்துறையினர் அவரிடம் தீவிர முதற்கட்ட விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வெளியான தகவல்கள் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தின.
கொலை செய்யப்பட்ட அலமேலு அப்பகுதியில் சிறு சிறு தொகைகளை வட்டிக்குக் கொடுத்து அதனை வட்டியுடன் திரும்பப் பெறும் தொழில் செய்து வந்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராஜப்பன் என்பவர் அலமேலுவிடம் 2,500 ரூபாயைக் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் வாங்கிய தொகையையோ அல்லது அதற்கான வட்டியையோ ராஜப்பன் திருப்பித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள்ளும் கடந்த சில நாட்களாகவே கடுமையான பணத் தகராறு நீடித்து வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அலமேலு, ராஜப்பனின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அலமேலு ராஜப்பனை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. தனது வீட்டிற்கு வந்து அலமேலு திட்டியதால் ஆத்திரமடைந்த ராஜப்பன் அவரைப் பழிவாங்கத் திட்டம் தீட்டியுள்ளார். இதன் படி கடந்த மே 23ஆம் தேதி அலமேலுவைச் சந்தித்த ராஜப்பன் தன்னிடம் பணம் தயாராக இருப்பதாகக் கூறி அதைத் தருவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் வருமாறு அழைத்துள்ளார்.
ராஜப்பனின் பேச்சை நம்பிய அலமேலுவும் அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றதும் ராஜப்பன் அலமேலுவைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைப்பதற்காக அலமேலுவின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான வஞ்சக்கொழி என்ற இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்குள்ள 50 அடி ஆழமுள்ள மலைப் பள்ளத்தில் அந்தச் சாக்கு மூட்டையை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
கைது செய்யப்பட்ட ராஜப்பன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கல்வராயன் மலைப் பகுதியின் வஞ்சக்கொழி காட்டுப் பகுதிக்கு விரைந்தனர். அங்கு 50 அடி ஆழப் பள்ளத்தில் சாக்கு மூட்டையினுள் அழுகிய நிலையில் இருந்த அலமேலுவின் சடலத்தை 18 நாட்களுக்குப் பிறகு மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் உடற்கூறாய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அறிக்கைக்குப் பின்னரே மரணத்தின் முழுமையான காரணங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் காவல்துறையினருக்குப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அடர்ந்த மலைப் பகுதிக்கு அலமேலுவின் உடலைத் தனி ஒரு ஆளாக ராஜப்பன் மட்டும் கொண்டு சென்று, 50 அடி பள்ளத்தில் வீசியிருக்க வாய்ப்பில்லை என்று காவல்துறையினர் கருதுகின்றனர். எனவே இந்தச் சம்பவத்தில் ராஜப்பனுக்கு வேறு யாரேனும் உதவினார்களா, உடந்தையாக இருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ராஜப்பனின் மனைவியிடமும் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெறும் 2,500 ரூபாய் வட்டிப் பணத்திற்காக, திட்டமிட்டுப் பெண் ஒருவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, படுகொலை செய்து சடலத்தை மலைப் பள்ளத்தில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை அறிய அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.








