சென்னை , ஜூன் 11 : தமிழ்நாட்டில் எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குவாரிகள் மற்றும் கிரஷர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் பிரபு எச்சரித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் குவாரி உரிமையாளர்களுக்கு அவர் இந்த நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப் பொருட்களான எம்-சாண்ட் (M-Sand), பி-சாண்ட் (P-Sand) மற்றும் ஜல்லிக்கற்களின் விலை எவ்வித காரணமுமின்றி உயர்த்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தரப்பில் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த விலையேற்றம் சாமானிய மக்களைப் பாதிக்கும் சூழல் உருவானதைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டுள்ளது.
Also : மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்க வாய்ப்பில்லை: நீர்வளத்துறை தகவல் ! காரணம் ??
இதன் முதற்கட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் பிரபு அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், அரசு நிர்ணயம் செய்துள்ள விலைப் பட்டியலின் படியே கட்டுமானப் பொருட்கள் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தன்னிச்சையாக விலையை உயர்த்தி, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கும் குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு, விதிமீறல் சட்டங்களின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
விலை உயர்வு மட்டுமல்லாது குவாரிகளில் இருந்து இயக்கப்படும் லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பாரம் (Overload) ஏற்றக் கூடாது என்ற மிக முக்கியமான உத்தரவும் இந்த கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குவாரி வளாகத்தில் இருந்தே லாரிகளில் அதிக பாரம் ஏற்றி அனுப்பப்படுவது கண்டறியப்பட்டால் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி, அதற்கு அனுமதி அளித்த குறிப்பிட்ட கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் மீதும் இணைந்தே நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் பிரபு தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் அதற்கான உபகரணங்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் வெடிபொருட்களைக் குவாரி வளாகங்களில் சேமித்து வைக்கக் கூடாது என்றும் இந்த விதியை மீறும் குவாரிகள் உடனடியாக மூடப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ள சூழலில் அடுத்தகட்டமாக லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து செங்கல் சூளை உரிமையாளர்களுடனும் ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அடுத்தடுத்த முக்கிய முடிவுகள் இந்த தொடர் கூட்டங்களின் முடிவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








