நெல்லை , ஜூலை 1: நெல்லை அருகே ஆன்லைனில் நிலத்தை கணினிப் பதிவேற்றம் செய்வதற்கான அதிகாரபூர்வ விசாரணையின் போது நில உரிமையாளர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து ஆஜரான இரண்டு பேரை பாளையங்கோட்டை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடி வரும் போலீஸார் இந்த மோசடிப் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) பொன் அய்யப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது ஆளுகைக்குட்பட்ட சுத்தமல்லி பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மூன்று வீட்டுமனைகள் (பிளாட்டுகள்) அமைந்துள்ளன. இந்த இடங்களை தங்களது பெயருக்கு கணினியில் முறைப்படி பதிவேற்றம் (Online Land Registration) செய்து தருமாறு அதே பகுதியைச் சேர்ந்த கணேசன், அசோகன் மற்றும் நெல்லையப்பன் ஆகிய மூன்று பேர் நெல்லை வருவாய் கோட்டாட்சியரிடம் (ஆர்.டி.ஓ) ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெறப்பட்ட இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் முதற்கட்ட ஆவணச் சரிபார்ப்பு மற்றும் கள ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக விண்ணப்பத்தின் உண்மைத்தன்மையை நேரில் சரிபார்ப்பதற்காக, விண்ணப்பித்த கணேசன், அசோகன், நெல்லையப்பன் ஆகிய மூன்று பேரும் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆர்.டி.ஓ உத்தரவிட்டிருந்தார்.
சத்துணவில் முட்டை சர்ச்சை: நிபுணர்கள் கூறும் அறிவியல் உண்மை
இதற்கான விசாரணையின் போது விண்ணப்பதாரர்கள் மூன்று பேரும் நேரில் வரவில்லை. அதற்குப் பதிலாக நெல்லை டவுன் சம்பந்தர் தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 66), தடிவீரன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 45) மற்றும் மகேஷ் ஆகிய மூன்று நபர்கள் ஆர்.டி.ஓ முன்னிலையில் ஆஜராகியுள்ளனர். விசாரணையின் போது இவர்களின் அடையாளங்கள் மற்றும் ஆவணங்களை ஆர்.டி.ஓ தீவிரமாகச் சரிபார்த்தார்.
அதிகாரியின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஆஜரான நபர்களின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நிலத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்த உண்மையான நபர்கள் மூவரும் தற்போது மும்பையில் வசித்து வருவதும் அவர்களுக்குப் பதிலாக இந்த மூன்று பேரும் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக விசாரணையை எதிர்கொள்ள வந்திருப்பதும் அம்பலமானது. அரசு அதிகாரியை ஏமாற்றி நிலத்தை கணினியில் ஏற்ற முயன்ற இந்தத் துணிச்சலான ஆள்மாறாட்டச் சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆர்.டி.ஓ அளித்த நேரடி அறிவுறுத்தலின் பேரில் சுத்தமல்லி கிராம நிர்வாக அலுவலர் பொன் அய்யப்பன் உடனடியாகப் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் அரசு அதிகாரியை ஏமாற்றுதல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதில் மோசடிக்கு உடந்தையாக இருந்து ஆள்மாறாட்டம் செய்த 66 வயது முருகன் மற்றும் 45 வயது முருகன் ஆகிய இருவரையும் போலீஸார் சம்பவ இடத்திலேயே அதிரடியாகக் கைது செய்தனர். இதற்கிடையே போலீஸாரைக் கண்டதும் தப்பியோடிய மகேஷ் என்ற மற்றொரு நபரைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து வலைவீசித் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு முருகன்களிடமும் போலீஸார் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் இருக்கும் நபர்களுக்காக இவர்களை ஆள்மாறாட்டம் செய்யத் தூண்டியது யார், இதன் பின்னணியில் இருக்கும் நில புரோக்கர்கள் அல்லது இடைத்தரகர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நகர்கிறது. இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என பாளையங்கோட்டை போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது .





