நெல்லை , ஜூன் 5: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே போலி ஆவணம் தயாரித்து,பெண்ணுக்குச் சொந்தமான 42 சென்ட் நிலத்தை மோசடியாக விற்பனை செய்த இருவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
களக்காடு பத்மநேரி பகுதியைச் சேர்ந்தவர் மதுபாலன். இவருடைய மனைவி மலர்விழி (54). இவருக்கு சிங்கிகுளம் பழைய கிராமம் பகுதியில் 42 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை மலர்விழியின் தந்தை,கடந்த 2003ஆம் ஆண்டு குடும்ப ஏற்பாட்டுப் பத்திரம் மூலம் அவரது பெயருக்கு முறைப்படி எழுதிக் கொடுத்துள்ளார். அன்றில் இருந்து அந்த நிலம் மலர்விழியின் பராமரிப்பிலும் அனுபவத்திலும் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில்,மலர்விழி தனது மகளுக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுப்பதற்காகத் தேவையான ஆவணங்களுடன் பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது,தனக்குச் சொந்தமான 42 சென்ட் நிலம் ஏற்கனவே வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டு,போலிப் பத்திரம் மூலம் மோசடியாகப் பதிவு செய்யபட்டிருப்பது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
Also : நெல்லையில் ரூ.30 லட்சம் வீட்டு மனை மோசடி: 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு
100% தேர்ச்சி பெற்ற 73 பள்ளிகளுக்கு பாராட்டு; மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு
விசாரணையில்,மலர்விழியின் நிலத்திற்கு அருகில் வசிக்கும் சிங்கிகுளம் மலையடி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி ராஜபொண்ணு (65) என்பவரே இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மலர்விழியின் நிலத்திற்குப் போலி ஆவணங்களைத் தயாரித்து,களக்காடு பாளாங்குளத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கணேசன் (55) என்பவருக்கு அந்த நிலத்தை விற்பனை செய்து முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து மலர்விழி சம்பந்தப்பட்ட ராஜபொண்ணு மற்றும் கணேசனிடம் நேரில் சென்று முறையிட்டுள்ளார். அப்போது,போலிப் பத்திரத்தை இன்னும் இரண்டு நாட்களில் ரத்து செய்து தருவதாகக் கூறி அவர்கள் மலர்விழியைத் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். ஒருகட்டத்திற்கு மேல் நிலத்தை ரத்து செய்ய மறுத்ததுடன்,கணேசன் என்பவர் மலர்விழியைத் தரக்குறைவாகப் பேசி,அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,நில மோசடியால் பாதிக்கப்பட்ட மலர்விழி,தனக்கு நீதி கோரி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் விரிவான புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில்,உரிய விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவிட்டார்.
அதன்படி,மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து,சட்டவிரோதமாக நிலத்தை விற்ற ராஜபொண்ணு மற்றும் அதனை வாங்கிய கணேசன் ஆகிய இருவர் மீதும் குற்றப்பிரிவு சிறப்புச் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி முறைப்படி வழக்குப்பதிவு செய்தார். இந்த நில மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்குத் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.








