
திருநெல்வேலி , May 6: புதிதாக வாங்கிய 45 நாட்களிலேயே பழுதடைந்த வாஷிங் மெஷின் குறைபாட்டை சரிசெய்யாமல், வாடிக்கையாளரை அலைக்கழித்த ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு ரூ.56,650 இழப்பீடு வழங்க திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலை சந்திக்காமல் டெல்லி நுழையும் தவெக? விஜய் கட்சிக்கு ராஜ்யசபா ஜாக்பாட் வாய்ப்பு!
வழக்கின் பின்னணி:
திருநெல்வேலி தெற்கு பாலபாக்கியா நகரைச் சேர்ந்தவர் கிளாட்ஸன் ஆண்டனி துரை. இவரது மனைவி ஸ்வீட்லின் தீவிர மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததால், அவரது சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு, கடந்த 2024 மே 26 அன்று பாளையங்கோட்டையில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) ஷோரூமில் ரூ.36,649.80 மதிப்பில் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் தானியங்கி வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஆனால், நுகர்வோரின் எதிர்பார்ப்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இயந்திரத்தை வாங்கிய 45 நாட்களிலேயே, அதாவது ஜூலை 9 அன்று, அதன் அடிப்பகுதியில் இருந்த கழிவுநீர் வெளியேறும் குழாய் (Waste Water Tube) திடீரென உடைந்தது. இதனால் வாஷிங் மெஷினில் இருந்து வெளியேறிய நீர் வீடு முழுவதும் பரவி, அந்த குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர் அலைக்கழிப்பு:
இதுகுறித்து கிளாட்ஸன் தரப்பு ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்திடம் உடனடியாகப் புகார் அளித்துள்ளது. எனினும், மூன்று நாட்களாக முறையான பதில் ஏதுமின்றி அவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நேரடியாக ஷோரூமிற்குச் சென்று முறையிட்டபோது, அங்கிருந்த ஊழியர்களின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை என்றும், அந்த மன உளைச்சலில் ஸ்வீட்லின் அங்கேயே மயங்கி விழுந்ததாகவும் நுகர்வோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சாம்சங் நிறுவனத்தின் சேவை மையத்தைத் தொடர்புகொண்டபோது, “தற்போது தேவையான குழாய் கையிருப்பில் இல்லை, அதற்குத் தனியாக ரூ.700 செலுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வந்த ஊழியர்கள் தவறான மாற்றுப் பாகத்தைப் பொருத்தியதால் பழுது சரியாகவில்லை. இறுதியாக, இது “உற்பத்திக் குறைபாடு” (Manufacturing defect) எனத் தொழில்நுட்ப ஊழியர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும், நிறுவனங்கள் தரப்பில் வாஷிங் மெஷினை மாற்றிக்கொடுக்கவோ அல்லது பணத்தைத் திரும்பத்தரவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பு:
நிறுவனங்களின் இந்த அலட்சியப் போக்கால் பாதிக்கப்பட்ட தம்பதியினர், தங்களுக்கு நீதி கோரி வழக்கறிஞர் பிரம்மா மூலமாக திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் இந்த வழக்கு, நிர்வாகக் காரணங்களுக்காக கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.
வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, நுகர்வோருக்கு வழங்கப்பட்ட சேவையில் குறைபாடும் (Deficiency in service), முறையற்ற வாணிப நடைமுறையும் (Unfair trade practice) அரங்கேறியிருப்பதை உறுதி செய்தது.
இதையடுத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவில், சாம்சங் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனங்கள் கூட்டுப் பொறுப்பாகப் பின்வரும் தொகையை வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது:
- வாடிக்கையாளர் வாஷிங் மெஷினுக்கு செலுத்திய தொகை ரூ.36,650-ஐ, வழக்கு தொடரப்பட்ட நாளில் இருந்து 9 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும்.
- நிறுவனங்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10,000 வழங்க வேண்டும்.
- வழக்குச் செலவுத் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும்.
இந்த மொத்தத் தொகையையும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் ஆணையம் கெடு விதித்துள்ளது.
பிரபலமான பிராண்ட் (Brand) என்ற நம்பகத்தன்மை மட்டுமே சந்தையில் போதாது என்றும், விற்பனைக்குப் பிந்தைய சேவை (After-sales service) மற்றும் நுகர்வோர் மீதான பொறுப்புக்கூறல் ஆகியவையே ஒரு நிறுவனத்தின் தரத்தை நிர்ணயிக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உணர்த்தியுள்ளது.





