சிவகங்கை , ஜூன் 19 : மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஆய்வு ரயில் இன்ஜின் மோதிய விபத்தில் திருப்புவனத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜாவின் மகன் வசந்த் (22). டிப்ளமோ படிப்பை முடித்துள்ள இவர் அண்மையில் நடைபெற்ற காவலர் தேர்வுக்கான (Police Exam) எழுத்துத் தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகளுக்காகக் காத்திருந்தார். இதுமட்டுமன்றி இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவிருந்த ரயில்வே தேர்வுக்கும் (Railway Exam) தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார்.
இன்று அதிகாலை வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து நடைப்பயிற்சிக்காக வசந்த் வெளியே சென்றுள்ளார். நடைப்பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வழியில் திருப்புவனம் ரயில்வே பீடர் சாலை அருகே உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி தடம் மற்றும் சமிக்ஞை ஆய்வுப் பணிக்காக ஒரு பெட்டியுடன் கூடிய ரயில் இன்ஜின் ஒன்று வந்துள்ளது.
அதிகாலை நேரம் என்பதால் ரயில் வருவதைக் கணிக்காத வசந்த் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஆய்வு ரயில் இன்ஜின் அவர் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் தூக்கி வீசப்பட்ட வசந்த் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து தகவலறிந்த திருப்புவனம் காவல்துறையினரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த வசந்தின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீண்ட நாட்களாகக் கடுமையான உடற்பயிற்சி மற்றும் தயாரிப்புகளுக்குப் பிறகு காவலர் தேர்வு எழுதிவிட்டு அடுத்த இரண்டு நாட்களில் மத்திய அரசின் ரயில்வே பணியாளர் தேர்வையும் எழுதவிருந்த இளைஞர் அதே ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் உயிரிழந்த வசந்தின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருகிறார் என்றும் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், பணிவிடைகளையும் வசந்த் ஒருவரே முன்னின்று கவனித்து வந்தார் என்றும் தெரிவித்தனர். குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாகத் திகழ்ந்த வசந்தின் திடீர் மறைவு அந்த ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது என அவர்கள் கண்ணீருடன் குறிப்பிட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் வசந்தின் உடலைப் பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சிகள் பார்ப்போரை நெஞ்சை உருக வைக்கக் கூடியதாக இருந்தது. இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்து நிகழ்ந்த விதம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





