திருச்சி, மே 27: திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ள சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு, துறையூரில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் (கிளப்) சட்டவிரோதமாக மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வந்த இந்த முறைகேடு குறித்துக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பி. பி. ரவிசங்கர் இன்று நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் மதுப்பிரியர்களின் தேவையைப் பயன்படுத்தி, அந்த தனியார் மனமகிழ் மன்றத்தில் ஒரு மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 20 ரூபாய் வசூலித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி, காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய 10 ரூபாய் தொகையை வழங்கும் தமிழக அரசின் மறுசுழற்சித் திட்ட விதிகளையும் அந்த மன்றம் காற்றில் பறக்கவிட்டுள்ளது. பாட்டில்களைத் திரும்பப் பெறாமலும், அதற்குரிய தொகையை வழங்காமலும் வாடிக்கையாளர்களை அந்த நிர்வாகம் ஏமாற்றி வந்ததும் இந்த ஆய்வின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
also read : 100 நாள் வேலை ஊதியம் தாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் திரு. என். ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவு
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், “முறையான கொள்முதல் கணக்குகள் ஏதுமின்றி இந்த மனமகிழ் மன்றத்தில் மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய மன்றங்களில் உறுப்பினர்களுக்கு மட்டுமே சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இங்கு விதிகளுக்குப் புறம்பாக, உறுப்பினர்கள் அல்லாத பொதுமக்களுக்கும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது,” என்றார்.
இந்த விவகாரத்தில் அரசுக்கு நேரடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதை அடுத்து, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு கலால் துறை அதிகாரிகளுக்கு துணை சபாநாயகர் உடனடியாக உத்தரவிட்டுள்ளார். கலால் துறையின் முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் மனமகிழ் மன்றத்தின் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்








