சென்னை , ஜூன் 15 : தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ,நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலித்த புகாரின் பேரில் ,கடந்த இருபது நாட்களில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) கூடுதலாகப் பணம் வசூலிக்கக் கூடாது என்று நிர்வாகத் தரப்பில் தொடர்ந்து கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ,பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடைகளில் ஒரு சில பணியாளர்கள் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
திருவண்ணாமலை : கர்ப்பிணி பெண்ணிடம் ஆடைகளை களைந்து ஆபாசமாக பேசி இச்சைக்கு அழைத்த வாலிபர் கைது
குறிப்பாக ,அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் தரப்பில் இருந்து இது தொடர்பான பல்வேறு வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. குறிப்பிட்ட சில டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. இந்த வீடியோ பதிவுகள் மூலமாக அரசிடமும் ,டாஸ்மாக் நிர்வாகத்திடமும் பொதுமக்கள் தங்களது புகார்களை வலுவாகப் பதிவு செய்தனர்.
சமூக ஊடகங்களில் வெளியான இந்த ஆதாரங்கள் மற்றும் வந்த புகார்களின் அடிப்படையில் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளின் போது ,நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி கூடுதலாகப் பத்து ரூபாய் வசூலிக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ,விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்துள்ளது. அதன்படி ,கடந்த இருபது நாட்களிலேயே 200-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு ஏறத்தாழ இருபத்தி நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ,கடந்த இருபது நாட்களில் மட்டும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு தரப்பில் தொடர் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இனிவரும் நாட்களிலும் மதுபானங்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விற்பனையாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ,பணியிட மாற்றம் மற்றும் பணியிடை நீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் சட்டப்படி விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தற்போது மீண்டும் எச்சரித்துள்ளது. பாட்டிலுக்கு கூடுதலாகப் பணம் வசூலிக்கும் முறைகேடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் நிர்வாகத் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.







