சென்னை, June 3: தமிழகத்தில் பயறு வகைகளின் உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்புடன் ‘பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்’ வேளாண்மைத்துறையின் மூலம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் முக்கியப் பகுதியாக, உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், புதிய பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க நடப்பு 2026-27ஆம் நிதியாண்டிலும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு 33 சதவீத மானியத்துடன், அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைத் தவிர்த்து அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கும் இத்தகைய பதப்படுத்தும் நிலையங்கள் பெரும் உதவியாக இருக்கும் என அரசு தரப்பில் கருதப்படுகிறது.தமிழகத்தில் உள்ள முதன்மைப் பயறு உற்பத்தி மாவட்டங்களை மையமாகக் கொண்டு இத்திட்டம் இந்த ஆண்டும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மேலும் அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட மொத்தம் 33 மாவட்டங்களைச் சேர்ந்த உழவர் அமைப்புகளும் தனிநபர்களும் இதில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
Also read : திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர் மரணம்: அதிர்ச்சி அறிக்கை
2029 National Games நடத்த தமிழகம் தயாராகிறது! டெல்லியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முக்கிய மனு
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற, அரசு அங்கீகரித்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs), கிராமப்புற மற்றும் வட்டார அளவிலான தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள் (CLFs), விவசாயிகளுக்கு நேரடியாகச் சேவை வழங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் (PACCs) மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட ஆர்வமுள்ள தனிநபர் தொழில்முனைவோர் ஆகியோர் தாராளமாக முன்வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பயறு வகைகளைத் தரம் பிரித்தல், தூய்மைப்படுத்துதல் மற்றும் சிப்பமிடுதல் போன்ற பணிகளுக்கான நவீன இயந்திரங்களுடன் கூடிய நிலையங்களை அமைக்க இந்த மானியத் தொகை நேரடியாகப் பயன்படுத்தப்படும்.
கடந்த 2025-26ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டு நன்மதிப்பைப் பெற்ற இந்த இயக்கம், நடப்பு நிதியாண்டிலும் தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.எனவே, தமிழகத்தின் குறிப்பிட்ட 33 மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் உள்ள பயனாளிகள், தங்களின் பகுதிகளில் உள்ள மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு இதற்கான விண்ணப்ப நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் வரும் 12.06.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் அணுகிப் பயன்பெறுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் தனது செய்தி வெளியீட்டில் கேட்டுக் கொண்டுள்ளார்.காலக்கெடுவிற்குள் வரும் விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் மானியங்கள் விரைவாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








