தென்காசி, ஜூன் 3: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வரும் வாலிபரை புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபருக்கு அடுத்த சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவுக்கு உட்பட்ட இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (26).இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்தார்.தற்போது சென்னை பட்டாலியனில் (ஆயுதப்படை பிரிவில்) காவலராகப் பணியாற்றி வருகிறார்.சொந்த ஊரான இடையன்குளத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகுமார் விடுமுறையில் வந்துள்ளார்.
Also : திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர் மரணம்: அதிர்ச்சி அறிக்கை
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரை, விஜயகுமார் தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, அழுதுகொண்டே தனது வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த சம்பவத்தைக் கூறி வருந்தியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில், காவலர் விஜயகுமார் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ (POCSO) சட்டப் பிரிவுகளின் கீழ் விஜயகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.தொடர்ந்து, இன்று அதிகாலை அவரை போலீசார் முறைப்படி கைது செய்தனர்.பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள காவலர் விஜயகுமாருக்கு சமீபத்தில்தான் பெண் பார்க்கப்பட்டு, முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.அடுத்த சில நாட்களில் அவருக்குத் திருமணம் நடைபெறவிருந்த சூழலில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது காவல் துறை வட்டாரத்திலும், அவரது கிராமத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து புளியங்குடி போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.








