6 வயது சிறுமி சீரழித்து கொலை.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து இறங்கும் தமிழகஅரசு !

Chennai, May 28: தமிழகத்தை உலுக்கிய சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்தின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை திருத்தக் கோரும் மனுவைத் (Review Petition) தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.

image 564

கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை போரூர் அருகே ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவ்வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த் என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2018ஆம் ஆண்டில் தஷ்வந்தின் மனுவைத் தள்ளுபடி செய்து அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ததுடன், அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

also read : 6 வயது சிறுமி சீரழித்து கொலை.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து இறங்கும் தமிழகஅரசு !

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த விடுதலைத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி (தீர்ப்பைத் திருத்தக் கோரி) மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில், தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் அதற்குத் தகுந்த சான்றிதழ் வழங்கி அனுமதி அளித்ததாக தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அதுபோன்ற எந்தவொரு சான்றிதழையும் வழங்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரியவந்துள்ளது. உயர் நீதிமன்றம் சான்றிதழ் அளிக்காத நிலையில், தவறான தகவலைக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது நீதித்துறையை ஏமாற்றும் செயலாகும். இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்பதால், தஷ்வந்த் விடுதலையான தீர்ப்பைத் திரும்பப் பெற வேண்டியது அவசியமாகிறது. எனவே, இத்தீர்ப்பைத் திருத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், அதனைத் திருத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விரைவில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசுத் தரப்பின் இந்த முக்கிய வாதத்தையும், தஷ்வந்த் விவகாரத்தில் அரசு எடுக்கவுள்ள சட்டப்பூர்வ நடவடிக்கையையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர் வெங்கடேஷ் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கை இத்துடன் முடித்து வைத்து உத்தரவிட்டனர். நீதிமன்றத்தை ஏமாற்றிப் பெறப்பட்டதாகக் கூறப்படும் தஷ்வந்தின் விடுதலைத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடவிருப்பது இவ்வழக்கில் மீண்டும் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1043

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »