டெல்லி , ஜூன் 1:நீட் இளங்கலை மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்தில், வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகள் காரணமாக ஏற்கனவே நடைபெற்ற தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, வருகிற ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த சூழலில், ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வை நடப்பு ஆண்டிலேயே கணினி வழித் தேர்வாக (Computer Based Test) நடத்த தேசிய தேர்வுகள் முகமைக்கு (NTA) உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ராஷ்ட்ரிய ஜனதா தள (RJD) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர் சிங் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த முக்கிய வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அரவிந்த குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த விசாரணையின் போது, ஏற்கனவே மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமை தரப்பில், கணினி வழித் தேர்வு முறையை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வு தேதியானது அறிவிக்கப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில், கடைசி நேரத்தில் தேர்வு முறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்று நீதிமன்றம் கருதியது.
Also read : பொறியியல் கலந்தாய்வு தேதி ஜூன் 29-ல் அறிவிப்பு: அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்
மேலும், நடப்பு ஆண்டிலேயே இத்தகைய நடைமுறை மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து, ஆர்ஜேடி எம்பி சுதாகர் சிங் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வு, திட்டமிட்டபடி வழக்கமான முறையிலேயே (Pen and Paper mode) நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.








