புதுடெல்லி,மே 29 : அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தகுதித் தேர்வை எழுதி முடிப்பதற்கான கால அவகாசத்தை மட்டும் மூன்று ஆண்டுகளாக நீட்டித்து நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியிருந்தது. அதில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களாக இருந்தாலும், அவர்கள் பணி உயர்வு பெற வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் கொண்ட ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதவில்லை எனில், அவர்களின் பணி உயர்வு பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் கொண்ட ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் இத்தேர்வை எழுதி தகுதி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டெட் தேர்வில் தகுதி பெறாத ஆசிரியர்களைப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றதாகக் கருதப்பட்டு அதற்கான ஓய்வுகாலப் பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் முந்தைய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு தமிழகத்தில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
Also read : கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி அதிரடி கைது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மறுஆய்வு கோரிக்கையை நீதிபதிகள் முழுமையாக ஏற்க மறுத்துவிட்டனர். கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர் தகுதித் தேர்வு மிக முக்கியப் பங்கு வகிப்பதால், பணி உயர்வுக்கு டெட் தேர்வு கட்டாயம் என்ற முந்தைய தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இருப்பினும், தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பாக ஒரு குறிப்பிட்ட நிவாரணத்தை வழங்குவதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி, முந்தைய தீர்ப்பில் விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகள் என்ற கால அவகாசத்தை மாற்றி, ஆசிரியர்கள் தகுதி பெற மூன்று ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் வரும் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் டெட் தேர்வை எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த இறுதி கெடுவுக்குப் பிறகு எந்தவொரு காரணத்தைக் கொண்டும் கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஆசிரியர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதி பெறுவதற்கு ஏதுவாக, மாநில அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) எவ்விதத் தொய்வுமின்றி விரைந்து நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.








