ராமநாதபுரம் , ஜூன் 28: ராமநாதபுரம் அருகே வீட்டின் திண்ணையில் பாட்டியுடன் உறங்கிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போய் பின்னர் வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த அந்தச் சிறுமி ராமநாதபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நேற்று வந்துள்ளார். இரவு பாட்டியுடன் வீட்டின் வெளித்திண்ணையில் சிறுமி உறங்கியுள்ளார். இன்று அதிகாலை சுமார் ஐந்து மணி அளவில் பாட்டி எழுந்து பார்த்தபோது அருகில் படுத்திருந்த பேத்தியைக் காணாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து உறவினர்களுக்கும் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மோப்பநாய் மற்றும் அதிரடிப்படையினர் உதவியுடன் அப்பகுதியில் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு வீடுகளுக்கு அருகில் உள்ள கிணறுகளில் சோதனையிடப்பட்டது.
திருவக்கரை சிவன் கோயிலில் விமான கோபுர கலசங்கள் திருட்டு: போலீஸ் விசாரணை
அப்போது வீட்டின் அருகாமையில் உள்ள பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் சிறுமி சடலமாக மிதப்பது கண்டறியப்பட்டது. தீயணைப்புத் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் உடலைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
தற்போது தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிறுமி தற்செயலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் அவரை கடத்திச் சென்று கிணற்றில் வீசினார்களா என்ற கோணங்களில் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.





