சென்னை , ஜூன் 28 : தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகிய இருவருக்கும் தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சார்பில் சட்டப்பூர்வ வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமக்கு எதிராக உண்மைக்கு புறம்பான மற்றும் அவதூறு கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறி இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் மிக முக்கியப் பின்னணியில் இருக்கும் நபரால் தற்போதைய அமைச்சரவையில் உள்ள இருவருக்கு எதிராக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பென் (PEN) நிறுவனத்தின் தலைவரான சபரீசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஸ்வின் பிரசன்னா இந்த நோட்டீஸை அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ளார். கடந்த ஜூன் 25ஆம் தேதி அமைச்சர்கள் இருவரும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரும் தன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க தலைவரின் மருமகன் என்ற ஒரே காரணத்திற்காக உள்நோக்கத்துடன் இந்த ஆதாரமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளதாக நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மகேந்திரகிரி இஸ்ரோ புதிய இயக்குநராக நாராயணன் அப்பு நியமனம்
அமைச்சர்கள் இருவரும் பொதுவெளியில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும் பல ஆண்டுகளாகப் பொதுவாழ்விலும் தொழில்முறையிலும் தாம் பேணி வரும் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல் என்றும் சபரீசன் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸில் விவரிக்கப்பட்டுள்ளது. பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருக்கும் அமைச்சர்கள் எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி இத்தகைய கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டது சட்டப்படி தவறு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் இருவரும் தங்களது அவதூறு கருத்துக்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்தக் கருத்துக்கள் பரப்பப்பட்டனவோ அதே ஊடகங்களின் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தற்போது இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள அவதூறு வீடியோக்கள் மற்றும் செய்திகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் அமைச்சர்கள் இருவரும் உரிய விளக்கம் அளித்து மன்னிப்பு கோரத் தவறினால் அவர்கள் மீது கடுமையான சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவதூறு வழக்கு மற்றும் இழப்பீடு கோரும் வழக்குகள் உள்ளிட்ட அடுத்தகட்ட சட்டப் போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என அந்த நோட்டீஸில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது





