மயிலாடுதுறை , ஜூன் 5: மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா ஆமருவியப்பா’ என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த பெருமையைக் கொண்ட இந்தத் தலம் திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் பத்தாவது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.இக்கோயிலில் மூலவர் ஸ்ரீதேவாதிராஜன் என்ற திருநாமத்துடனும், உற்சவர் ஸ்ரீஆமருவியப்பன் என்ற திருநாமத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இத்தலத்தின் வரலாற்றுப் பின்னணியின்படி உபரிசரவசு என்ற மன்னன் வான்வழியாகத் தேரில் செல்லும்போது அவனது தேரின் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகிவிடும்படியான வரத்தைப் பெற்றிருந்தான்.ஒருமுறை மன்னனின் தேர் இப்பகுதியின் மேலே சென்றபோது அதன் நிழல் கண்ணபிரான் மற்றும் அவர் மேய்த்துக் கொண்டிருந்த பசுக்களின் மீது விழுந்தது.இதனால் பசுக்கள் பெரும் துயரமடைந்தன.மன்னனின் இந்த ஆணவத்தை அடக்க நினைத்த கண்ணபிரான் தேரின் நிழல் விழுந்த இடத்தில் தனது திருவடியை வைத்து பலமாக அழுத்தினார்.இதனால் மன்னனின் தேர் மேலே செல்ல முடியாமல் பூமியில் அழுந்தியதுடன் அவனது செருக்கும் அழிந்தது.தேரின் ஓட்டம் தடைபட்டு பூமிக்குள் அழுந்திய இந்த வரலாற்று நிகழ்வின் காரணமாகவே இத்தலம் ‘தேரழுந்தூர்’ என்று பெயர் பெற்றது.
100% தேர்ச்சி பெற்ற 73 பள்ளிகளுக்கு பாராட்டு; மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு
நெல்லை களக்காடு அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடி: இருவர் மீது வழக்கு
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் ஆண்டு வைகாசி பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த மே மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.விழாவின் முக்கியப் பகுதியாக தினந்தோறும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை முறைப்படியான வழிபாடுகளுடன் தொடங்கியது.முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் செங்கமலவல்லி தாயார் உடனாகிய ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டார்.தொடர்ந்து சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கூடியிருந்த திரளான பக்தர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தேர் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே நிலை நிறுத்தத்தைச் சென்றடைந்தது.
இந்தத் திருத்தேரோட்ட விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்மீகப் பிரமுகர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினரும் உபயதாரர்களும் செய்திருந்தனர்.








