மதுரை June 5: மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ள மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவிலின் 74-ஆவது ஆண்டு வைகாசி உற்சவ விழா தற்பொழுது பக்தி சிரத்தையுடன் நடைபெற்று வருகிறது. பாரம்பரியமிக்க இந்த விழாவானது காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் முறைப்படி தொடங்கியது. விழாவினை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் இந்த வைகாசி உற்சவ விழாவின் மிக முக்கிய சிகர நிகழ்வான நேர்த்திக்கடன் செலுத்தும் ஊர்வலம் இன்று அதிகாலை பக்தி பரவசத்துடன் தொடங்கியது. இன்று காலை 5 மணி முதலே வைகை ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளத் தொடங்கினர். அங்கு தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு விரதமிருந்த பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகளை எடுத்தும் அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த ஆயத்தமாகினர்.
அதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து தொடங்கிய இந்த பக்தி ஊர்வலம் ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் நோக்கிப் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது தலைகளில் பால்குடங்களைச் சுமந்து கொண்டு பக்தி கோஷங்களுடன் நடந்து சென்றனர். மேலும் அம்மனுக்கு தங்களது நேரிய பக்தியை வெளிப்படுத்தும் விதமாக 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு நீளங்களிலான வேல் மற்றும் அலகுகளை உடம்பில் குத்தியபடி ஊர்வலத்தில் பயணித்தனர்.
இந்த விழாவின் முக்கிய ஈர்ப்பாக 50-க்கும் மேற்பட்ட 5 அடுக்கு மற்றும் 3 அடுக்கு அமைப்புகளைக் கொண்ட 30 அடி முதல் 50 அடி வரை உயரமுள்ள பிரம்மாண்ட பறவை காவடிகள் தேர் காவடிகள் மற்றும் பால்காவடிகளைப் பக்தர்கள் எடுத்து வந்தனர். வைகை ஆற்றங்கரையில் இருந்து ஜெய்ஹிந்த்புரம் வரை உள்ள முக்கிய மாநகரச் சாலைகள் வழியாக இந்த ஊர்வலம் மிக நீண்ட தூரம் பயணித்தது.
சுமார் 15,000-க்கும் அதிகமான பக்தர்கள் இந்த வழிபாட்டு ஊர்வலத்தில் ஒரே நேரத்தில் அணிவகுத்துச் சென்றதால் மதுரை மாநகரின் முக்கியச் சாலைகள் அனைத்தும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. வண்ணமயமான காவடிகளும் பக்தர்களின் பக்தி கோஷங்களும் ஒட்டுமொத்தப் பகுதியையும் ஒரு பெரும் திருவிழாக் கோலமாக மாற்றியிருந்தன.
கோவிலை வந்தடைந்த பக்தர்கள் கொண்டு வந்த பாலால அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பெருவிழாவின் தொடர்ச்சியாக நாளை ஊர்ப் பொங்கல் வைக்கும் நிகழ்வு அக்னி சட்டி எடுத்தல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் ஆகியவை சிறப்பாக நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஜூன் 3-ஆம் தேதியன்று பெண்களின் உலக நன்மைக்கான சிறப்புத் திருவிளக்கு பூஜையும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினரும் ஜெய்ஹிந்த்புரம் பகுதி பொதுமக்களும் முறைப்படி செய்து வருகின்றனர்.








