நெல்லை ,ஜூன் 15 : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிலம் கொடுத்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் மு.அப்பாவு தமிழக தலைமைச் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வெளிமாநிலத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர் ,உள்ளூர் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ,கடந்த 1999-ஆம் ஆண்டு அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ,அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான தான் மற்றும் இந்திய அணுமின் திட்ட இயக்குநராக இருந்த டாக்டர் அத்ன்ட்ரா ஆகியோரிடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த உடன்படிக்கையின்படி ,கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்காகத் தங்களது நிலங்களை வழங்கியவர்களுக்கும் ,அந்தப் பகுதி மக்களுக்கும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியிடங்களில் எந்தவித தேர்வு முறையுமின்றி தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 2011-ஆம் ஆண்டு வரை எவ்வித தடையுமின்றி அமலில் இருந்து வந்துள்ளது.
இபிஎஸ் மகனுக்கு ஐ.டி விங் பதவியா? அதிமுகவில் வெடித்த எதிர்ப்பு.. ராஜ் சத்யன் கடும் ஆட்சேபனை!
ஆனால் 2011-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ,அணுமின் நிலைய நிர்வாகம் இந்த நடைமுறையைத் தன்னிச்சையாக மாற்றி அமைத்தது. உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பை ரத்து செய்துவிட்டு ,போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க நிர்வாகம் முயன்றது. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தான் நீதிமன்றம் மூலம் தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தி ,அந்த மாற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாக அப்பாவு தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள ‘D’ பிரிவு பணியிடங்களுக்கு அண்மையில் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் நிலம் கொடுத்ததற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் (Land Loser Certificate) வைத்துள்ள பல நூறு உள்ளூர் இளைஞர்களும் ,இளம்பெண்களும் கலந்துகொண்டு தங்களது தகுதியை நிரூபித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் தேர்வில் வெற்றி பெற்ற உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க அணுமின் நிலைய நிர்வாகம் மறுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளூர் தகுதிவாய்ந்த நபர்களைப் புறக்கணித்துவிட்டு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்களுக்கான இந்த வேலைவாய்ப்பு மறுப்பைக் கண்டித்தும் ,தங்களது வாழ்வாதார உரிமைகளை மீட்கக் கோரியும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைத் தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள நடவடிக்கைக்கு அவர் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு ,தேர்வில் வெற்றி பெற்று காத்துக்கொண்டிருக்கும் உள்ளூர் இளைஞர்களுக்கு உடனடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ,நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடியதற்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றத் தவறினால் ,பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கத் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மு.அப்பாவு எச்சரித்துள்ளார்.







