திருநெல்வேலி , ஜூன் 29: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் கோரி நீண்ட வருடங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டு, தற்போதும் தங்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். தங்களுக்கு உரிய ஜாதி சான்றிதழ் கிடைக்கப் பெறாததன் காரணமாக, தங்களது பிள்ளைகளின் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து கொண்டு செல்வதில் பெரும் சிக்கல்களையும், கடுமையான வாழ்வாதாரப் பின்னடைவுகளையும் சந்தித்து வருவதாக அந்த சமுதாய மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு நில்லாமல் அரசின் மூலம் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் கூட இந்த ஒரு காரணத்தினால் தங்களுக்கு மறுக்கப்படுவதாக அவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் குறையாக இருந்து வருகிறது.
கால்வாயில் மீட்கப்பட்ட சடலத்திற்கு இறுதிச்சடங்கு: 13 ஆம் நாளில் உயிரோடு திரும்பிய மகன்
இந்த நிலையில் ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டு வரும் காட்டு நாயக்கர் சமுதாய மக்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகம் களமிறங்கியுள்ளது. அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் நிர்வாகிகளும் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை முறைப்படி அளித்தனர். இந்த சந்திப்பின் போது காட்டு நாயக்கர் சமுதாய மக்களுக்கு ஏன் இவ்வளவு காலமாக ஜாதி சான்றிதழ் வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து அங்கு பணியில் இருந்த அரசு அதிகாரிகளிடம் தமிழக வெற்றி கழகத்தினர் விரிவான விளக்கம் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அரசு அதிகாரிகள் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்களில் சிலர் தங்களது சமுதாயப் பின்னணியை உறுதிப்படுத்துவதற்கான சில முக்கிய ஆவணங்களையும், தேவையான அடிப்படை தரவுகளையும் இன்னும் முழுமையாகச் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்தனர். அதன் காரணமாகவே சான்றிதழ்களைச் சரிபார்த்து வழங்குவதில் இத்தகைய காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் துறை சார்ந்த அதிகாரிகள் கேட்கக்கூடிய அந்தத் தரவுகளையும், விடுபட்ட முக்கிய ஆவணங்களையும் முறைப்படி தங்களுக்கு அளிக்கும் பட்சத்தில், தகுதியுடைய நபர்களுக்கு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் அப்போது உறுதி அளித்துள்ளனர்.
ஆட்சியர் அலுவலக சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அரசு அதிகாரிகள் கேட்கக்கூடிய முறையான ஆவணங்கள் மற்றும் தரவுகள் தற்போதைக்குக் கைவசம் இருக்கும் நபர்களுக்கு மிகத் துரிதமாக ஜாதி சான்றிதழைப் பெற்றுத் தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக வெற்றி கழகம் முன்னின்று மேற்கொள்ளும் என்று கூறினார். மேலும் இந்த சமுதாய மக்களுக்கு ஜாதி சான்றிதழ் கண்டிப்பாகப் பெற்றுத் தரப்படும் என்றும் இந்த விவகாரம் மற்றும் மக்களின் நிலை குறித்து ஏற்கனவே தங்களது கட்சியின் தலைமைக்கு முழுமையான தகவல்கள் முறைப்படி விரிவாகத் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாட்களாக ஜாதி சான்றிதழ் கிடைக்கப் பெறாமல் தவித்து வந்த அம்பாசமுத்திரம் பகுதி காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் இந்த புதிய நகர்வின் மூலம் விரைவில் தங்களது நீண்ட காலப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தற்போது உள்ளனர்.





