
Chennai , Lokbhavan , May 8 : ஆளுநர் மாளிகையிலா தீர்மானம்?.. சட்டப்பேரவையிலா பெரும்பான்மை?.. விஜய்யை தடுக்க அரசியலமைப்பு மீறப்படுகிறதா என்ற கேள்வி! தமிழக அரசியலில் புதிய சர்ச்சை. முதலமைச்சரை தேர்வு செய்வதில் ஆளுநரின் அதிகாரம் என்ன? எஸ்.ஆர்.பொம்மை தீர்ப்பு என்ன சொல்கிறது?
தமிழக அரசியலில் தற்போது மிகப்பெரிய விவாதமாக மாறியிருப்பது, “முதலமைச்சரை தீர்மானிப்பது யார்?” என்ற கேள்விதான். குறிப்பாக நடிகர் விஜய் அரசியலில் வேகமாக முன்னேறி வரும் சூழலில், ஆளுநரின் அதிகாரம், சட்டப்பேரவையின் பெரும்பான்மை மற்றும் அரசியலமைப்பு நடைமுறைகள் குறித்து புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.
Also Read : விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார் திருமா சிக்னல் கொடுத்த விசிக. “TVK ஆட்சி அமைக்க வாய்ப்பு” என பரபரப்பு தகவல்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164வது பிரிவின்படி, மாநில முதலமைச்சரை ஆளுநர் பதவியில் அமர்த்துகிறார். ஆனால் இதில் முக்கியமான அரசியலமைப்பு உண்மை என்னவென்றால், முதலமைச்சரை ஆளுநர் “நியமிக்கவில்லை”; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தலைவரை பதவியேற்க அழைக்கிறார் என்பதுதான்.
அரசியலமைப்பின் அடிப்படை தத்துவப்படி, மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவை பெற்ற நபரே முதலமைச்சராக தொடர முடியும். அந்த பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் ஆளுநர் மாளிகை அல்ல; சட்டப்பேரவையே. இதனை பலமுறை உச்சநீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.
அதனால், எந்தக் கட்சி அல்லது கூட்டணி 118 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருக்கிறது என்பதை தீர்மானிப்பது “Floor Test” எனப்படும் சட்டப்பேரவை வாக்கெடுப்பின் மூலமே நடைபெற வேண்டும் என்பதே அரசியலமைப்பு நடைமுறை.
“Pleasure of Governor” என்றால் என்ன?
அமைச்சரவை ஆளுநரின் விருப்பம் உள்ளவரை பதவியில் இருக்கும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டாலும், அதை ஆளுநர் தனிப்பட்ட விருப்பமாக பயன்படுத்த முடியாது என்பதே சட்ட நிபுணர்களின் விளக்கம்.
அதாவது, ஆளுநர் தனது அரசியல் பார்வை அல்லது தனிப்பட்ட முடிவின் அடிப்படையில் முதலமைச்சரை நீக்கவோ, பதவி மறுக்கவோ முடியாது. சட்டப்பேரவையின் நம்பிக்கை இருக்கும் வரை அமைச்சரவை தொடரும்.
இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையாக பார்க்கப்படுகிறது.
எஸ்.ஆர். பொம்மை வழக்கு ஏன் முக்கியம்?
இந்த விவாதத்தில் அதிகமாக பேசப்படுவது 1988ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த எஸ்.ஆர். பொம்மை வழக்குதான். அப்போது ஜனதாதளம் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் எஸ்.ஆர். பொம்மைக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தரப்படவில்லை. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று தீர்ப்பு, இந்திய கூட்டாட்சி அமைப்பின் மிக முக்கியமான பாதுகாப்பு கவசமாக பார்க்கப்படுகிறது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், “ஒரு அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை ஆளுநர் மாளிகையில் முடிவு செய்ய முடியாது; அது சட்டப்பேரவையில்தான் நிரூபிக்கப்பட வேண்டும்” என்று தெளிவாக கூறப்பட்டது.
மேலும், மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரமும் முழுமையாக தன்னிச்சையானது அல்ல; அது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் விளக்கியது.
-சிறப்பு கட்டுரை





