
சென்னையின் எப்ஸ்டீன் : பாடகி ஸ்வாகதா பிரபல இசையமைப்பாளர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு முன்வைத்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் “இரவுக்கு ஆயிரம் கண்கள்”, “காற்றின் மொழி”, “பேச்சுலர்”, “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்” உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடி கவனம் பெற்றவர் பாடகி ஸ்வாகதா. சுமார் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை மாயாவின் சகோதரியாகவும் அறியப்படுகிறார். தற்போது பாடகி ஸ்வாகதா வெளியிட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : அதிமுக பிளவு : 32 எம்எல்ஏக்கள் இல்லாமல் சிக்கிய வேலுமணி தரப்பு.. 25 பேருக்கு தகுதி நீக்க ஆபத்தா?
சமீபத்தில் அளித்திருந்த ஒரு நேர்காணலில் பேசிய ஸ்வாகதா, தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாமல், அந்த நபர் பல பெண்களிடமும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரை “சென்னையின் எப்ஸ்டீன்” எனவும் குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பினார்.
“ஸ்டுடியோவில் இருந்து தலைதெறிக்க ஓடினேன்” – ஸ்வாகதா குற்றச்சாட்டு
அந்த நேர்காணலில் பேசிய ஸ்வாகதா, சம்பவம் நடந்த காலத்தை நினைவுகூர்ந்து பல அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்திருந்தார். அந்த இசையமைப்பாளர் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி திருப்பி தரவில்லை என்றும், ஒருநாள் அவரது ஸ்டுடியோவில் தனியாக இருந்தபோது தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், “அந்த ரூமில் இருந்து தலைதெறிக்க ஓடினேன்” என அவர் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகே சினிமா துறையை விட்டு விலக முடிவு செய்ததாகவும், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வாழ்க்கையை விட்டு வெளியேறி தற்போது கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ரிஷிகேஷில் வாழ்ந்து வருவதாகவும் ஸ்வாகதா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா, MeToo குற்றச்சாட்டு, பாலியல் துன்புறுத்தல் விவகாரம் போன்ற முக்கிய தேடல் வார்த்தைகளுடன் இந்த விவகாரம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
“டஜன் கணக்கில் பெண்கள் பாதிப்பு” – இன்ஸ்டாகிராம் பதிவில் பகீர்
இந்த நிலையில், ஸ்வாகதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவுகள் விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த பதிவில், “உங்களில் பலர் யார் அந்த இசையமைப்பாளர் என யூகித்திருப்பீர்கள். நான் ஒரு சராசரியான பாடகர்தான். மிகப் பெரிய ஹிட் பாடல்களை நான் பாடவில்லை. குறிப்பிட்ட சில இசையமைப்பாளர்களுடன் மட்டுமே பணியாற்றினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின், “இந்த சம்பவம் நடந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. அந்த இசையமைப்பாளரால் டஜன் கணக்கில் பெண்கள் மட்டுமல்ல, சில ஆண்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்” என அவர் கூறியிருப்பது புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
“வழக்குச் செலவு ஏற்கிறீங்களா?” – ஸ்வாகதாவின் சவால் பதிவு
ஸ்வாகதா தனது மற்றொரு பதிவில், “யார் அந்த இசையமைப்பாளர் என தெரிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் வழக்குக்கான செலவை ஏற்கப் போகிறீர்களா? செலவு செய்கிறீர்கள் என்றால் நான் அவரின் பெயரை சொல்லிவிடுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அத்துடன், “இது போன்ற விஷயங்களில் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ளுங்கள். நான் சட்டப்படி இதை சந்திப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தேவையற்ற கருத்துக்கள் பதிவிடும் சமூக வலைதள கணக்குகளை தாம் குறிவைத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம், சிலர் சட்டரீதியான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை வெளியிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“இனி அமைதியாக இருக்க மாட்டேன்” – சட்ட நடவடிக்கைக்கு தயாரா?
ஸ்வாகதாவின் மற்றொரு பதிவில், பல ஆண்டுகளாக மனவேதனையுடன் வாழ்ந்ததாகவும், அந்த காயங்களில் இருந்து மெதுவாக மீண்டு வர முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். “தேவியின் அருளால் எனக்குள் புதிய தைரியம் வந்துள்ளது. இனி அமைதியாக இருக்கப் போவதில்லை. மகிஷாசுர மர்த்தனம் போன்ற ஒரு போராட்டத்தை தொடங்கப் போகிறேன்” என அவர் கூறியுள்ளார்.












