சென்னை ,ஜூன் 26: திமுக முன்னாள் அமைச்சர் E.V.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையை வீ லீடர்ஸ் அமைப்பின் தலைமைச் சேவகரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு சாலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின் உத்தரவின்படி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைத் தான் வரவேற்பதாக அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த வழக்குகள் அனைத்தும் விரைவாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ALso : சேலத்தில் பிறந்து 7 நாள் ஆன பெண் குழந்தை ₹2 லட்சத்திற்கு விற்பனை
அதே நேரத்தில் கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முக்கியமான ஊழல் குற்றச்சாட்டுகளின் பட்டியலையும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த விவகாரங்கள் குறித்தும் தமிழக வெற்றிக் கழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை குறிப்பிட்டுள்ள முக்கிய ஊழல் புகார்களின் பட்டியல்:
- பிஜிஆர் எனர்ஜி ஊழல்: விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனத்திற்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டதும் பின்னர் அது வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- ஊட்டச்சத்து கிட் ஊழல்: ஆவின் நிறுவனம் சத்துமாவு தயாரிக்க முன்வந்திருந்த நிலையிலும் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு சத்துமாவு வாங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்.
- பொங்கல் வேட்டி ஊழல்: வேட்டி உற்பத்தியில் பருத்திக்கு பதிலாக அதிக அளவில் பாலியஸ்டர் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் அதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளதால் அது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போக்குவரத்து துறை முறைகேடுகள்: போக்குவரத்து துறையில் வாகனங்களுக்கான பிரதிபலிப்பு தகடுகள் (Reflective Stickers) உள்ளிட்ட கொள்முதல்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அரசு விசாரிக்க வேண்டும்.
- மருத்துவச் சேவைகள் மற்றும் ஊரகத் திட்டங்கள்: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் நடைபெற்ற பூச்சிக்கொல்லி கொள்முதல் முறைகேடுகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும் விசாரணை அவசியம்.
இவற்றுடன் நீண்ட காலமாகப் பதில் கிடைக்காமல் இருக்கும் ஒரு முக்கிய விவகாரத்தையும் அண்ணாமலை தனது பதிவில் எழுப்பியுள்ளார்.முன்னாள் துணை முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றமும் ,ஒரு தனியார் ஸ்டீல் நிறுவனமும் ஒரே முகவரியில் செயல்பட்டது ஏன் என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அந்த குறிப்பிட்ட தனியார் ஸ்டீல் நிறுவனம் தமிழ்நாட்டில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அத்தகைய முதலீடு தமிழ்நாட்டிற்குள் வந்ததற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிவுகளும் தற்போது வரை இல்லை என்பதால் இது குறித்தும் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அண்ணாமலை கோரியுள்ளார்.
அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராகவும் ,கட்சி நிர்வாகியாகவும் இருந்த காலகட்டத்திலேயே இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் பல்வேறு ஆதாரங்களுடன் திமுக அரசுக்கு எதிராக முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பாஜகவிலிருந்து விலகி இருக்கும் நிலையிலும் அதே புகார் பட்டியலை மீண்டும் வெளியிட்டு இந்த விவகாரங்கள் அனைத்தையும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தற்போதைய தமிழக அரசு தீர விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.





