சென்னை, ஜூன் 1: தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் தகுதி (Pure Merit) மற்றும் நேர்மையின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்றும், இதில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளோ, லஞ்ச லாவண்யங்களளோ அனுமதிக்கப்படாது என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் (CTR Nirmal Kumar) செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தகுதி அடிப்படையில் மட்டுமே நியமனம்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி.ஆர். நிர்மல் குமார், நீதிமன்றங்கள் சிறப்பாகச் செயல்படவும், நீதிபதிகள் தங்களது பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும் திறமையான அரசு வழக்கறிஞர்களின் பங்களிப்பு அவசியம் என்று குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
“உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் (Guidelines) அடிப்படையில், தகுதியான அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் பணிகளை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. எந்தவித பாகுபாடோ, வெளித் தலையீடோ இல்லாமல் ‘பியூர் மெரிட் பேசிஸ்’ (Pure Merit Basis) மூலமாக மட்டுமே இந்த நியமனங்கள் நடைபெறுகின்றன. சாமானிய மற்றும் ஏழை எளிய மக்களுக்கான நீதி கிடைப்பதில் எந்தவித காலதாமதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.”
கடந்த கால முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி
கடந்த காலங்களில் அரசு வழக்கறிஞர் போன்ற உயரிய பதவிகள் அரசியல் குறுக்கீடுகளாலும், கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டும் பெறப்பட்டதாகத் தன்னிடம் பலர் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், இனி அதுபோன்ற தவறுகளுக்கு இடமில்லை என்றார்.
“ஒரு அரசு எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும், நீதிபதிகள் நீதியை வழங்க நினைத்தாலும், அதற்கு அரசு வழக்கறிஞர்கள் ஒரு வலுவான தூணாக இருக்க வேண்டும். அந்த இடத்தை சீரமைக்க வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாகவே, கடந்த சில நாட்களாக உயர் நீதிமன்றத்தில் தற்காலிக வழக்கறிஞர்களை (Temporary Advocates) தகுதியின் அடிப்படையில் நியமித்து வருகிறோம்.
Also read : ஜூன் 1 முதல் ATM கட்டணம், UPI பெயர்கள் & சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள்!!!
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது முற்றிலும் தகுதி அடிப்படையில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவதைப் பார்த்து பல முன்னாள் நீதிபதிகள் தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுவே இந்த அரசின் முக்கிய கொள்கை,” என்று அவர் கூறினார்.
அடுத்த ஒரு மாத காலத்திற்குள் அரசு தலைமை வழக்கறிஞர் (Advocate General – AG), அரசு வழக்கறிஞர் (Government Pleader – GP) மற்றும் மாவட்ட அளவிலான அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களும் படிப்படியாக நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தகுதி இல்லாமல் பணத்தை மட்டும் கொடுத்து பதவிகளைப் பெறும் நடைமுறைக்கு இந்த ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
மேகதாது அணை விவகாரம் மற்றும் DVAC வழக்குகள்
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளதாகக் கூறினார். இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் (Legal Actions) தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும், நீதிமன்ற விடுமுறை முடிவடைந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் விளக்கினார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குகளின் தாமதம் குறித்த கேள்விக்கு, “தற்போதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரின் (Director of Vigilance) நியமனம் முடிவடைந்துள்ளது. DVAC என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு (Autonomous Body). அங்கு தேங்கிக் கிடக்கும் வழக்குகள் அனைத்தையும் துரிதமாக முடிப்பதற்கான கிளீன்-அப் (Clean-up) பணிகள் நடைபெற்று வருகின்றன. தவறு செய்தவர்களுக்கு விரைவில் தகுந்த தண்டனை பெற்றுத் தரப்படும்,” என்றார்.
அதிமுக பிளவு: பின்னணி என்ன?
அதிமுகவிலிருந்து நான்கு பேர் ராஜினாமா செய்தது மற்றும் குதிரை பேரம் (Horse Trading) நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சி.டி.ஆர். நிர்மல் குமார், இந்த நியமனங்களிலோ அல்லது அரசியல் நகர்வுகளிலோ எவ்வித பேரமும் பேசப்படவில்லை என்று மறுத்தார்.
“அதிமுக ஏன் பிளவுபட்டது என்பதற்கு அவர்களே தெளிவான காரணத்தைக் கூறியுள்ளனர். திமுகவும் அதிமுகவும், அதாவது ஸ்டாலின் குடும்பமும் எடப்பாடி குடும்பமும் இணைந்து ஆட்ச அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு மறைமுக முயற்சியை மேற்கொண்டன. இந்த அதிகாரப் பகிர்வு முயற்சியை அதிமுகவில் உள்ள தொண்டர்களோ அல்லது திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளோ ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால்தான் திமுக கூட்டணியில் இருந்த பல தலைவர்கள் வெளியே வந்தனர்.
தங்களையும் தங்களது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் தலைவர்களை நம்பி தொண்டர்களும், எம்.எல்.ஏ-க்களும் எப்படிப் பயணிப்பார்கள்? இந்த அடிப்படைப் பிரச்சனை பிடிக்காமல்தான் அவர்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்துள்ளனர். இதில் எவ்வித சட்டவிரோத பேரமும் நடைபெறவில்லை,” என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.








