சென்னை, மே 31 : ஜூன் 1, 2026 முதல் பல தரப்பினரையும் பாதிக்கும் வகையிலான பல்வேறு புதிய விதிகள் & கட்டண மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.வங்கிச் சேவைகள்,டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் கேஸ் சிலிண்டர் விலைகள் & தமிழக அரசு நிர்வாகம் சார்ந்த முக்கிய மாற்றங்கள் குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு:

வங்கி டெபாசிட் & சொத்து பரிவர்த்தனை விதிகளில் மாற்றம் :
வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த விதிகளில் பொதுமக்களுக்குச் சாதகமான சில முக்கிய தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இனி PAN Card கட்டாயம் இல்லை: இதுவரை வங்கிகளில் ஒரே நாளில் 50000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்வதற்கு பான் கார்டு எண் சமர்ப்பிப்பது கட்டாயமாக இருந்த நிலையில் நாளை முதல் இந்த விதியில் தளர்வு அளிக்கப்பட்டு பான் கார்டு எண் கட்டாயம் இல்லை என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
- சொத்து பரிவர்த்தனையின் வரம்பு உயர்வு: சொத்துக்கள் வாங்குதல் & விற்பனை செய்வதற்கான பணப் பரிவர்த்தனை வரம்பு இதுவரை 10 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் நாளை முதல் 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
ஏடிஎம் கட்டணங்கள் & பிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு:-
நாளை முதல் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்களது ஏடிஎம் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
- ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணம்: வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு உள்ள வங்கியைத் தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்களில் கார்டுகளைப் பயன்படுத்தும்போது விதிக்கப்படும் கட்டணங்கள் அதிகமாகின்றன .
- இதர சேவைகளுக்கும் இனி கட்டணம்: பணம் எடுப்பது மேலும் ஏடிஎம் மையங்களில் பேலன்ஸ் செக் செய்வது,மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது போன்ற நிதிசாரா சேவைகளுக்கும்) கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு உயர்த்தப்படவுள்ளன.
- ஃபிக்சட் டெபாசிட்: ஜூன் 1 முதல் வங்கிகளின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை ஜூன் 1 முதல் வங்கிகளால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூபிஐ (UPI) பரிவர்த்தனைகளில் இனி போலிப் பெயர்களுக்குத் தடை:-
GPay,PhonePe போன்ற UPI செயலிகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது பயனாளிகள் தங்களது கணக்குகளில் ‘மியாவ்’, ‘புலிக்குட்டி’ , ‘iron Man ‘ போன்ற புனைப்பெயர்களை (Nicknames) இனி பயன்படுத்த முடியாது.புது விதியின்படி பயணாளர்களின் வங்கி ஆவணங்களில் உள்ள அதிகாரப்பூர்வமான அசல் பெயர் (Official Name) என்னவோ அது மட்டுமே இனி UPI பரிவர்த்தனையின் போது திரையில் தோன்றும். இதன் மூலம் தவறான நபர்களுக்குப் பணம் அனுப்புவதும் டிஜிட்டல் முறைகேடுகளும் தடுக்கப்படும்.
LPG சிலிண்டர் விலையில் மாற்றம்: –
சர்வதேச சந்தையில் குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் & எரிவாயு இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளன.இதன் தாக்கம் உள்நாட்டு எரிவாயு விலையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. நாளை முதல் வீட்டு உபயோக & வணிக ரீதியிலான (Domestic and Commercial) எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளில் மாற்றங்கள் வரவுள்ளன.தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை தோராயமாக 928 ரூபாய் என்ற அளவில் உள்ள நிலையில் நிலைமை சீராகும் வரை இனி வரும் காலங்களில் அடிக்கடி விலை மாற்றங்களை மக்கள் எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் (Biometric) வருகைப்பதிவு: –
தமிழக அரசு நிர்வாகத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் (Biometric Attendance) முறை நாளை முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவரை ஐடி கார்டு மூலம் வருகைப்பதிவு செய்யும் போது ஒருவர் மற்றொருவருக்கு Proxy அட்டெண்டன்ஸ் போடும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இனி ஆதார் கார்டுக்குப் பதிவு செய்வது போல கைரேகை அல்லது கண் விழித்திரை (Iris scan) மூலமாக மட்டுமே வருகைப்பதிவு செய்ய முடியும். தனியார் ஐடி நிறுவனங்களைப் போல அரசு ஊழியர்கள் உணவு இடைவேளை (Lunch Break) மற்றும் இதர இடைவேளைகளுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் கண்காணிக்கும் வகையில் இந்த சாப்ட்வேர் (Software) வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார்களின் விலை உயர்வு:-
வாகன சந்தையில் முன்னணி நிறுவனங்களான Maruti Suzuki & ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்தவுள்ளன.ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல மாடலான கிரெட்டா (Creta) உட்பட பல்வேறு ரக கார்களின் விலைகள் ஜூன் 1 முதல் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
பருத்தி இறக்குமதிக்கு வரிவிலக்கு நீட்டிப்பு
நெசவு மற்றும் ஜவுளித்துறையினரின் கோரிக்கையை ஏற்று பருத்தி இறக்குமதிக்கான வரிவிலக்கு காலத்தை நீட்டிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் விஜய அவர்கள் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி ஜூன் 1 முதல் அக்டோபர் 31 வரையிலான குறிப்பிட்ட காலத்திற்குப் பருத்தி இறக்குமதிக்கான வரிவிலக்கு நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை புதிய மாதம் பிறக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வமான துல்லியமான கட்டண விவரங்கள் முழுமையாக வெளியாகும்.பொதுமக்கள் தங்களது நிதி சார்ந்த திட்டமிடல்களை இந்த மாற்றங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.













