கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு

கோவை , May 31: கோவை காந்திபுரத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு, தற்பொழுது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டிடத்தின் தற்போதைய நிலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்தாலோசித்த அமைச்சர், பின்னர் அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, கோவையின் மிக முக்கிய அடையாளமாக உருவாகி வரும் பெரியார் அறிவுலகத்தின் கட்டுமானப் பணிகள் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கட்டிட அமைப்பில் உள்ள ஒருசில சிறிய குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்த மையம் மிக விரைவில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்த நூலகம் கோவையின் அறிவுசார் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
Also read : டெண்டர் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: தமிழக மின்வாரியத்தில் 3 புதிய சிறப்பு குழுக்கள் அமைப்பு
விளையாட்டுத் துறை மேம்பாடு குறித்துப் பேசிய அமைச்சர், தமிழகத்தில் விளையாட்டுத் துறையை வெறும் பொழுதுபோக்காகப் பார்க்காமல், கல்வித் துறைக்கு இணையாக தரம் உயர்த்துவதற்கு முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறு விளையாட்டு மைதானங்களை ஒருங்கிணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள விளையாட்டு வளாகங்கள், மாநகராட்சி மைதானங்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) கட்டுப்பாட்டில் உள்ள மைதானங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பணிக்குச் செல்வோர் மற்றும் மாணவர்கள் தங்களுக்கு வசதியான நேரங்களில் விளையாடுவதற்கு ஏதுவாக, அனைத்து முக்கிய மைதானங்களிலும் உயர்தர மின்விளக்கு (Floodlights) வசதிகள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் காலை மற்றும் இரவு நேரங்களிலும் பொதுமக்கள் தடையின்றி விளையாட முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
கோவை மாவட்ட விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நேரு விளையாட்டு அரங்கத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவது தொடர்பாக ஏற்கனவே விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். கோவையைத் தவிர்த்து சென்னை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அகாடமிகள் மற்றும் அதிநவீன பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற விளையாட்டு வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளைத் தங்கள் பகுதிகளிலேயே பெற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சாலை விபத்துகள் குறித்தும் அமைச்சர் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 18 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்ட அவர், இந்த விபத்துகளின் எண்ணிக்கையைத் தீவிரமாகக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகக் கூறினார். குறிப்பாக, வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு, முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாகத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.
கோவையின் மிக முக்கியப் பிரச்சினையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. கோவை எல்அண்ட்டி பைபாஸ் சாலை மற்றும் நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய மேம்பாலங்கள் கட்டுவது மற்றும் சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் (NHAI) மாநில அரசு விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
அரசு நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அவர், பல்வேறு அரசுத் துறைகளில் தற்பொழுது நிலவி வரும் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தரத்தை உயர்த்துவதும், டெண்டர் முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும் இந்த அரசின் முதன்மை இலக்கு என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முடிவாக, கோவை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து தற்பொழுது தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் விரிவான அறிக்கை மிக விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதன் பிறகு கோவையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் முறைப்படி வெளியிடுவார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிறைவு செய்தார்.








