காஞ்சிபுரம் , ஜூன் 25: தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடர் தொடங்கியுள்ள சூழலில், மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளதை வரவேற்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளும், உரிமைகளும் முறையாகவும் கட்டாயமாகவும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் இந்தியாவின் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவது ஆரோக்கியமான நகர்வு என்றார். எந்தவொரு மாநிலத்திற்கும் அல்லது மாவட்டத்திற்கும் நிதியைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பிரதமர் நரேந்திர மோடிக்கு என்றும் இருந்தது இல்லை என அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய ஆட்சி மட்டுமின்றி, இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்திலும் தமிழகத்திற்குத் தேவையான அனைத்து நிதிகளும் முழுமையாகக் கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது தவிர தூத்துக்குடி போன்ற பகுதிகளில் கொண்டு வரப்பட்ட பிரம்மாண்டத் திட்டங்கள் போல இப்போதும் தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும், சட்டப்பூர்வமாக மாநிலத்திற்கு வர வேண்டிய தொகைகளும் நிச்சயம் வழங்கப்படும் என்று கூறினார்.
லஞ்ச ஒழிப்புச் சோதனை: ஏ.வ.வேலு மீது வழக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தற்போதைய முதலமைச்சர் முன்னாள முதலமைச்சரை விமர்சிக்கும் வகையில் குட்டிக்கதை ஒன்றை குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் அரசியல் விமர்சனங்களை சட்டப்பேரவையில் முன்வைக்காமல் வேறு எங்கு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். ஆளுங்கட்சியின் விமர்சனங்களுக்கு எதிர்க்கட்சியினர் உரிய விளக்கங்களை அளித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாதது குறித்த கேள்விக்கு விளக்கமளித்த நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையை அமைப்பதற்கான திட்டங்களை மூன்று பட்ஜெட்டுகளுக்கு முன்பே மத்திய அரசு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். எந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தேவை என்பதை மாநில அரசுகளே திட்டமிட்டு முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளதை நினைவூட்டிய அவர் இது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாநிலங்களின் கடன் சுமை அதிகரித்து வருவது மற்றும் முந்தைய அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் ஐந்து லட்சம் கோடி முதல் பதிமூன்று லட்சம் கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாக கூறப்படும் வெள்ளை அறிக்கை விவகாரம் குறித்தும் அவர் பொருளாதார ரீதியான விளக்கத்தை அளித்தார். கடன் வாங்குவது தவறல்ல ஆனால் அந்தப் பணத்தைக் கொண்டு பொதுமக்களுக்கான சொத்துக்களை உருவாக்குகிறோமா என்பதே முக்கியம் என்று அவர் வாதிட்டார்.
கடன் நிதியைக் கொண்டு பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கும்போது, அவை அடுத்த ஐம்பது முதல் அறுபது ஆண்டுகாலத்திற்கு தலைமுறை கடந்து பயன்படும். அதன் மூலம் உள்ளூரில் வேலைவாய்ப்புகள் பெருகும் கல்வி வாய்ப்புகள் வளரும், போக்குவரத்து வசதிகள் மேம்படும் எனத் தெரிவித்த அவர், இத்தகைய மூலதனச் செலவுகள் (Capital Expenditure) பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி ஒட்டுமொத்த வளர்ச்சியையும் ஊக்கப்படுத்தும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் பெரிய மருத்துவமனைகளைக் கட்டுவதிலும் கவனம் செலுத்துவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். வசதிகள் இருக்கும்போது மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பதோ, சம்பள உயர்வு வழங்குவதோ போன்ற வருவாய் சார்ந்த செலவினங்களைச் (Revenue Expenditure) செய்வதில் தவறில்லை, ஆனால் நிதி நெருக்கடி இருக்கும் காலங்களில் வாங்கும் கடனை எதிர்காலச் சொத்துக்களை உருவாக்குவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதே சரியான பொருளாதாரத் தத்துவம் என்று அவர் விவரித்தார்.
ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதி தலைநகரத் திட்டப் பணிகள் நடுவில் நிறுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் 2014 முதல் 2019 வரை ஆட்சியில் இருந்த கட்சி அமராவதியைத் தலைநகரமாக உருவாக்கத் திட்டமிட்டுப் பணிகளை மேற்கொண்டதாகக் கூறினார். அதன் பின்னர் 2019 முதல் 2024 வரை ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது தலைநகரத்தை வேறொரு இடத்திற்கு மாற்றும் முடிவால் அத்திட்டம் நிலுவையில் இருந்தது. தற்போது மீண்டும் 2024-க்குப் பிறகு அமராவதியே தலைநகரம் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களால் இத்தகைய முக்கியத் திட்டங்கள் நடுவில் நிறுத்தப்படக் கூடாது என்றும் அனைத்துக் கட்சிகளும் பொறுப்புடன் முடிவெடுத்தால் மட்டுமே திட்டங்களைத் தொய்வின்றி முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முழுமையான விவரங்கள் தமக்குத் தெரியாது என்பதால் அது குறித்து தற்போதைக்குக் கருத்து கூற விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.





