சென்னை , ஜூன் 26 : சென்னை மௌலிவாக்கத்தில் 17 வயது பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொடூரம் தொடர்பாக குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 6 பேரை காவல் துறையினர் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மவுண்ட் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால் மீண்டும் தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த மாணவி மிகுந்த சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்பட்டுள்ளார். மகளின் இந்த மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரிடம் கனிவோடு விசாரித்தபோதுதான் தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே விவரித்துள்ளார்.
சென்னை அனக்காப்புத்தூரில் பெப்பர் ஸ்பிரே அடித்து பெண் கொலை: பெங்களூரில் முக்கிய நபர் கைது
மாணவி அளித்த தகவலின்படி உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக அவர் மாங்காடு பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மாணவியின் ஆண் நண்பர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரத்தை வெளியே சொல்லக் கூடாது என சிறுமியை அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உடனடியாக களமிறங்கிய காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். சம்பவ இடமான மாங்காடு பகுதியில் தீவிரமாக விவரங்களைச் சேகரித்த போலீசார் இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்களைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட சிறுமியுடன் அவரது மற்றொரு தோழியும் உடன் சென்று திரும்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அந்தத் தோழிக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது அவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





