சென்னை ,ஜூன் 22: அரசு மற்றும் உள்ளாட்சித் துறை நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மரபு நெறிமுறைகளையும் (புரோட்டோகால்) சிறப்புரிமைகளையும் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை திரு.வி.க நகர் தொகுதி அரசுப் பள்ளித் திறப்பு விழாவில் ஏற்பட்ட புரோட்டோகால் சர்ச்சை தொடர்பான புகாரை ஆய்வு செய்த பின்னர் சபாநாயகர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

கடந்த ஜூன் 4 ,2026 அன்று திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பாக தனக்கான மரபு நெறிமுறைகள் மற்றும் புரோட்டோகால் விதிகள் மீறப்பட்டதாக அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மோ.ரா.பல்லவி சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வமாக மனு ஒன்றினை அளித்து முறையிட்டார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொகுதி எம்.எல்.ஏ-வான பல்லவி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
also : TN Assembly : தொழிற்சாலை விபத்து: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அமைச்சர் பர்வேஷ் விளக்கம்
இந்த மனுவை முழுமையாக ஆய்வு செய்த சபாநாயகர் இன்று சட்டப்பேரவையில் இது குறித்த தனது முக்கிய முடிவை அறிவித்தார். சட்டமன்றப் பேரவையின் கண்ணியத்தையும் மாண்புகளையும் காப்பதும் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளைச் செயல்படுத்துவதும் பேரவைத் தலைவராகிய தனது முதன்மையான கடமை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள புரோட்டோகால் விதிகளின்படி அரசமைப்புத் தலைவர்கள் தொடங்கி முக்கியப் பிரமுகர்கள் வரை ஒவ்வொருவரின் நிலைக்கு ஏற்ப முன்னுரிமை வரிசைமுறை (Warrant of Precedence) தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமை வரிசைமுறையை மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களும் ,அரசுத் துறைகளின் உயர் அலுவலர்களும் தங்களின் கடமைகள் மற்றும் அதிகார எல்லைகளை உணர்ந்து துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.
திரு.வி.க நகர் தொகுதியில் நடைபெற்ற அந்தப் பள்ளி விவகாரம் ,மரபு நெறிமுறைகள் குறித்த போதிய புரிதல் இல்லாததால் தெரிந்தோ தெரியாமலோ அல்லது அறிந்தோ அறியாமலோ நடந்த ஒன்றாகவே பார்க்க முடிகிறது என்று சபாநாயகர் குறிப்பிட்டார். இத்தகைய நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் தொடராது என்று நம்புவதாகவும் எனவே இந்த மனுவின் மீது உரிமை மீறல் குழு விசாரணைக்கோ அல்லது வேறு வகையிலான மேல் நடவடிக்கைக்கோ உத்தரவிடத் தேவையில்லை என்று கருதி இதனை இத்துடன் நிறைவு செய்வதாகவும் தெரிவித்தார்.
அதே வேளையில் எதிர்காலத்தில் இதுபோன்ற புரோட்டோகால் மீறல்கள் எங்கும் நடந்துவிடக் கூடாது என்பதில் சபாநாயகர் உறுதியான உத்தரவைப் பிறப்பித்தார். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்டங்கள் தோறும் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் ,அந்தந்தத் தொகுதியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எம்.எல்.ஏ-க்களின் சிறப்புரிமைகள் மற்றும் மரபு நெறிமுறைகளை நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கண்டிப்புடன் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உரிய அறிவுறுத்தல்களை உடனடியாக அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்னுரிமை வரிசைமுறை தொடர்பான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அரசாணை நகல் ,சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையில் உள்ள சிறு கணினிகளில் (Tabs) நாளை பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அனைத்து உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அது இன்று மாலைக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றும் சபாநாயகர் பேரவையில் முறைப்படி அறிவித்தார்.





