சென்னை , ஜூன் 9 : தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த மே 13, 2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அன்றைய தினம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றக் கட்சியின் கொறடா பிறப்பித்த உத்தரவை மீறி, அமைச்சரவைக்கு ஆதரவாக அக்கட்சியைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். கொறடாவின் உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்ட இந்த 25 உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.

இந்தச் சூழலில், கடந்த மே 27, 2022 அன்று பேரவைத் தலைவரின் அலுவலகத்திற்கு திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களிடமிருந்து நான்கு முக்கியக் கடிதங்கள் வரப்பெற்றன. அவர் அனுப்பிய முதல் கடிதத்தில் நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐந்து உறுப்பினர்களையும், இரண்டாவது கடிதத்தில் 14 உறுப்பினர்களையும், மூன்றாவது கடிதத்தில் ஓசூர் தொகுதி உறுப்பினர் திரு. பா. பாலகிருஷ்ணன் ரெட்டி அவர்களையும், நான்காவது கடிதத்தில் மயிலம் தொகுதி உறுப்பினர் திரு. சி.வி. சண்முகம் அவர்களையும் என மொத்தம் 21 உறுப்பினர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்த 21 சட்டமன்ற உறுப்பினர்களும் தாங்கள் அளித்த விளக்கத்தையும், கொறடா உத்தரவை மீறியதற்காக வெளிப்படுத்திய மனமார்ந்த வருத்தத்தையும் கருத்தில் கொண்டு, கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவர்களின் வாக்களிப்பைத் தான் மன்னித்துவிட்டதாக திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி தனது கடிதங்களில் தெரிவித்திருந்தார். இதன் விளைவாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் பத்தி 2(1)(b)-இன் கீழ் அந்த 21 உறுப்பினர்களுக்கும் எந்தவித தகுதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அனுப்பிய இந்த நான்கு கடிதங்களையும், சபாநாயகர் அவர்கள் ஒவ்வொன்றாகக் கவனமாகப் பரிசீலித்து முறையான ஆய்வை மேற்கொண்டார். பேரவை விதிகளின் முக்கியமான கருத்துக்களைக் கருத்தில் கொண்டு இறுதித் தீர்ப்பை அவர் அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரின் கடிதங்களின்படி, கடந்த மே 13 அன்று 21 உறுப்பினர்களால் செய்யப்பட்ட வாக்களிப்பை அவர் மன்னித்துள்ளதாலும், அதன் விளைவாக அவர்களுக்கு எந்த தகுதி இழப்பும் ஏற்படவில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளதாலும், இந்த மன்னிப்புக் கோரிக்கையைச் சபாநாயகர் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதன்படி, தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து விலக்கு பெற்றுள்ள அந்த 21 சட்டமன்ற உறுப்பினர்களின் விவரங்களைச் சபாநாயகர் முறைப்படி வெளியிட்டார். அவர்கள்: திரு. எஸ்.எஸ். சுகுமார் (ஆற்காடு), திரு. என்.எஸ்.என். நடராஜ் (காங்கேயம்), திரு. ஹரிபாஸ்கர் (அந்தியூர்), திரு. கா. மோகன் (பண்ருட்டி), திரு. ஜே. திலீபன் ஜெய்சங்கர் (சங்கரன்கோவில் – தனி), திரு. நத்தம் இரா. விஸ்வநாதன் (நத்தம்), திரு. எஸ்.பி. வேலுமணி (தொண்டாமுத்தூர்), திரு. கே.பி. அன்பழகன் (பாலக்கோடு), திரு. ஆர். காமராஜ் (நன்னிலம்), திரு. சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்), திரு. கே.சி. வீரமணி (ஜோலார்பேட்டை), திரு. கோ. அரி (திருத்தணி), திரு. அருள்மொழிதேவன் (புவனகிரி), திருமதி லீமா ரோஸ் மார்டின் (லால்குடி), திரு. கோவி. ரவி மனோகரன் (பழனி), திரு. எஸ். சேகர் (பரமத்திவேலூர்), திரு. இரா. ராகேஷ் (சங்கராபுரம்), திருமதி மரகதம் வெற்றிவேல் (பாப்பிரெட்டிப்பட்டி), திரு. பாலகிருஷ்ணன் ரெட்டி (ஓசூர்) மற்றும் திரு. சி.வி. சண்முகம் (மயிலம்) ஆவர். இவர்களுக்கு எதிரான அனைத்து மேல் நடவடிக்கைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் கீழ் கைவிடப்படுவதாகச் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதே வேளையில், தகுதி நீக்கம் செய்யக் கோரி அளிக்கப்பட்ட பட்டியலில் இருந்த எஞ்சிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பெருந்துறை தொகுதி உறுப்பினர் திரு. எஸ். ஜெயகுமார், மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் திரு. கே. மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி உறுப்பினர் திருமதி சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி உறுப்பினர் திரு. இசக்கி சுப்பையா ஆகிய அந்த நான்கு உறுப்பினர்கள் தொடர்பான மனுக்கள் மீது தற்போது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டப்பேரவை விதிமுறைகளின்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது கட்சியின் கொறடா அறிவிப்பை மறுத்து, அதற்கு மாறாக வாக்களித்தால், அந்த உறுப்பினர் மீது சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமை கடிதத்தின் மூலம் தெரிவிக்கும்போது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க விதியுள்ளது. அந்த விதியின் அடிப்படையில் கடந்த மே 13 அன்றே முதல் கடிதம் அளிக்கப்பட்டது. எனினும், கொறடா உத்தரவை மீறிய உறுப்பினர்களுக்கு 15 முதல் 30 நாட்களுக்குள் தங்களின் மாறுபட்ட கருத்து குறித்துப் பதில் அளிக்க விதிப்படி வாய்ப்பு உள்ளது. அந்தத் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளாகவே, 21 உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்துக் கடிதம் அளித்ததால், அவர்களைப் பொதுச்செயலாளர் மன்னித்த கடிதத்தைப் பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நான்கு உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அது குறித்த முழுமையான விளக்கம் மற்றும் முடிவுகள், நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் விரிவாக அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தனது இறுதித் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.








