புதுடெல்லி , ஜூன் 10 : தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் நாட்டின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த முறை டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியை மிகக் குறுகிய நேரமே சந்தித்ததாகவும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டுமே சந்தித்ததாகவும் எழுந்த விமர்சனங்களுக்கு விடையளிக்கும் வகையில் இந்த முறை அவரது பயணத் திட்டம் மிகவும் விரிவானதாகவும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி வந்திறங்கிய முதலமைச்சர் விஜய் தனது முதல் நாள் பயணத்தில் கூட்டணித் தலைவர்களைச் சந்திப்பதில் கவனம் செலுத்துகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசும் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் நேரில் செல்லவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்திக்கும் முதலமைச்சர் அதன் பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்பில் ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டால் அவை மறுநாள் காலையிலும் தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
Also : மோடி ஆட்சியின் மல்டிபேக்கர் பங்குகள் : ₹1 லட்சம் முதலீடு ₹2 கோடியாக மாறியதா? 206X லாபம்!
கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு – மெகா திருப்பம்.
இந்திய அணு ஆயுதக் கொள்கையில் மாற்றமா? ஏவுகணைகளுடன் பொருத்தப்பட்ட போர்க்கப்பல்கள் – சிப்ரி ஆய்வறிக்கை
முதலமைச்சரின் இரண்டாம் நாள் பயணத் திட்டத்தில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் முக்கியக் கொள்கை ஆராய்ச்சி அமைப்பாக (Think Tank) விளங்கும் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. மத்திய அரசு முக்கியக் கொள்கை முடிவுகளை எடுக்கும்போது மாநிலங்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை உள்ளடக்கி முடிவெடுக்க இந்த தளம் பயன்படுகிறது. இக்கூட்டத்தில் நாட்டின் அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். தமிழக முதலமைச்சர் விஜய் இக்கூட்டத்தின் பிற்பகல் அமர்வில் கலந்துகொள்ள உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசியல் களம் புகுந்து மிகக் குறுகிய காலத்தில் அதாவது இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்துப் பெற்ற இமாலய வெற்றி தற்போது தேசிய அளவில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களால் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இந்த அரசியல் திருப்பம் தேசிய அளவிலான அரசியல் தலைவர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் நிதி ஆயோக் கூட்டம் முதலமைச்சர் விஜய்க்கு மற்ற மாநில முதலமைச்சர்கள், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் நேரடி அறிமுகத்தையும், சுமுகமான சுமுக உறவை (Cordial Relationship) வளர்த்துக் கொள்வதற்கான நல்வாய்ப்பையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவில் பெரும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் டெல்லியில் சிறப்பு நிகழ்வும் அதனைத் தொடர்ந்து அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பிரதமர் அளிக்கும் சிறப்பு இரவு விருந்தும் நடைபெற உள்ளது. இந்த முக்கிய விருந்தில் தமிழக முதலமைச்சர் விஜயும் பங்கேற்கிறார்.
மூன்றாம் நாள் பயணத் திட்டத்தின்படி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்படும் முதலமைச்சர் விஜய், விமானம் மூலம் மதியத்திற்குள் சென்னை திரும்புகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாகப் பொதுமக்கள் மதிய உணவருந்த அனுமதிக்கப்படும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இல்லத்தைச் சுற்றி கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, புதிய நபர்களின் வருகை தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. கடந்த பயணத்தைப் போலவே இந்த முறையும் முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்கத் திட்டமிடவில்லை என்பதும் அவரது முழுப் பயணமும் மிக நெருக்கடியான கால அட்டவணையைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.








