
புதுடெல்லி , ஏப்ரல் 25 தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமான ராகவ் சதா உட்பட 7 ராஜ்யசபா எம்பிக்கள் தங்களது பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டு பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். இந்த திடீர் அரசியல் நகர்வு நாடாளுமன்ற மேலவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலத்தை 70 சதவீதம் வரை சரிவடையச் செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியானது. ராகவ் சதா, கட்சியின் மூத்த நிர்வாகி சாண்டீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோர் முன்னிலையில் இந்த அதிகாரப்பூர்வ இணைப்பு நிகழ்ந்தது. இந்த குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், விக்ரம் சாஹ்னி, ஸ்வாதி மலிவால் மற்றும் ராஜேந்திர குப்தா ஆகிய எம்பிக்களும் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்ற மேலவையில் மொத்தம் 10 இடங்களைக் கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த வெளியேற்றம் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் பலம் தற்போது வெறும் 3 இடங்களாகச் சுருங்கியுள்ளது.
தமிழ்நாடு தேர்தல் Exit Poll 2026 அறிவிப்பு எப்போது?தேதி, நேரம்?
அரசியல் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் கீழ் வரும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் வகையில் இந்த அரசியல் நகர்வு மிகவும் நுணுக்கமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் (2/3) பிரிந்து மற்றொரு கட்சியுடன் இணையும் பட்சத்தில் அவர்களின் பதவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற சட்ட விதியை இந்த குழு சரியாகப் பயன்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மியின் 10 எம்பிக்களில் 7 பேர் ஒரே குழுவாகப் பிரிந்துள்ளதால் இந்த தொழில்நுட்ப விதி அவர்களுக்குச் சாதகமாக மாறியுள்ளது. நாடாளுமன்ற மேலவையின் தற்போதைய கட்சி வாரியான பட்டியலிலும் இந்த 7 எம்பிக்களும் பாஜக உறுப்பினர்களாகவே சேர்க்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சதா இந்த முடிவைத் தனிப்பட்ட கட்சித் தாவலாகப் பார்க்கக் கூடாது என்றும் இது ஒரு முறையான அரசியல் இணைப்பு என்றும் விளக்கம் அளித்துள்ளார். ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்து உருவான ஆம் ஆத்மி கட்சி தற்போது தனது ஆரம்பகால கொள்கைகள் மற்றும் அடிப்படை மதிப்புகளிலிருந்து முற்றிலும் விலகிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர் தவறான கட்சியில் இருந்த சரியான மனிதன் தான் என்பதை உணர்ந்தே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டார். கட்சிக்குள்ளேயே தங்களை ஒடுக்கும் முயற்சிகள் நடந்ததாகக் குறிப்பிட்ட இந்த எம்பிக்கள் உள்கட்சி முரண்பாடுகளே தங்களின் இந்த சித்தாந்த மாற்றத்திற்குக் காரணம் என்று கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இதனை அப்பட்டமான துரோகம் என்று வர்ணித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மத்திய அரசின் அரசியல் அழுத்தங்கள் மற்றும் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் உத்திகளுக்கு இத்தலைவர்கள் அடிபணிந்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.







