
புதுடெல்லி, மே 17: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது, ஹார்மூஸ் நீரிணைப் பகுதியில் நீடிக்கும் அரசியல் பதற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து வருவது ஆகிய காரணங்களால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் ஒரு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் போர்களும், சர்வதேச அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தபோதிலும், இந்தியாவில் எரிபொருள் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஓரளவுக்கு நிலைத்தன்மை பேணப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய உலகளாவிய சூழல் அந்த நிலையை மாற்றி அமைத்திருக்கிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வு என்பது ஒரு தொடக்கப் புள்ளி மட்டும்தானா என்ற கவலை தற்போது பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கிய வழித்தடமாகத் திகழ்வது ஹார்மூஸ் நீரிணை ஆகும். கடந்த பத்து வாரங்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தீவிரமான பதற்றம் காரணமாக, இந்த வழித்தடத்தில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் உற்பத்தியின் பெரும்பகுதி இந்த குறுகிய கடல் பகுதி வழியாகவே பல்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள விநியோகத் தடை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியா தனது உள்நாட்டு எரிபொருள் தேவையில் பெரும்பாலான பகுதியை வெளிநாட்டு இறக்குமதி மூலமே ஈடுசெய்து வருவதால், இந்த சர்வதேசப் பற்றாக்குறையின் நேரடித் தாக்கம் இந்தியச் சந்தையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு என்பது வெறும் பெட்ரோல் நிலையங்களோடு முடிந்துவிடும் ஒரு பிரச்சனை அல்ல; அது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பிலும் சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. பெட்ரோல், டீசல் விலை கூடும்போது லாரி மற்றும் பேருந்து போக்குவரத்துச் செலவுகள், விவசாய உற்பத்திச் செலவு, தொழிற்சாலைகளின் இயக்கச் செலவு மற்றும் ஆன்லைன் உணவு விநியோகக் கட்டணங்கள் வரை அனைத்தும் உயரும் அபாயம் உள்ளது. பல நாடுகள் சர்வதேச விலை மாற்றத்திற்கு ஏற்ப உடனடியாக விலையை உயர்த்தியபோதும், இந்தியா குறிப்பிட்ட காலம் வரை உள்நாட்டு விலையைக் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தது. எனினும், தற்போதைய உலகளாவிய நெருக்கடி இந்தியாவையும் நிஜ நிலவரத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியுள்ளது. பொருளாதார வட்டாரங்களில் ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளின்படி, நீண்ட காலத்திற்கு இந்த அழுத்தத்தைத் தாங்குவது கடினம் என்பதால், மக்கள் தங்களின் அன்றாடச் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உருவாகி வருகிறது.
மறுபுறம், இந்த பொருளாதார அழுத்தத்தைச் சமாளிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முக்கியக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கவும், விலையேற்றத்தைத் தடுக்கவும் அதன் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தங்கத்தின் உற்பத்தி மிகவும் குறைவு என்பதால், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு அதிகளவிலான அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றன.
தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து, ஒரு டாலர் 95 ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான செலவுகள் அதிகரித்து, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக்குக் கடுமையான சவால் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கையிருப்பில் உள்ள டாலர்களை ஆடம்பரப் பொருட்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அத்தியாவசியமான கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த இக்கட்டான காலகட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரக (UAE) பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முக்கிய எரிசக்தி மற்றும் பொருளாதாரக் கூட்டாளியாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்துள்ளது. இந்தியாவுக்குத் தடையற்ற கச்சா எண்ணெய் விநியோகமும் வர்த்தக ஆதரவும் தேவைப்படும் அதே வேளையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியா போன்ற ஒரு பெரிய நுகர்வோர் சந்தை அவசியமாக உள்ளது. எனவே, வளைகுடா நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது தற்போதைய நிலையில் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்கு இன்றியமையாததாகும்.
தற்போது எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போதிலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் இழப்பிலேயே இயங்கி வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 10 ரூபாயும், டீசலுக்கு 13 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 69 டாலராக இருந்த நிலையில், தற்போது அது 106 டாலரைக் கடந்துள்ளது. கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் சர்வதேச விலையும் 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டே இந்த விலை உயர்வு தள்ளிப்போடப்பட்டதாக அரசியல் மற்றும் வணிக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
தற்போதைய பொருளாதாரச் சூழல் 2022 ஆம் ஆண்டு நிலவிய ரஷ்யா – உக்ரைன் போர்க் காலத்தை நினைவூட்டுவதாகப் பொருளாதார நிபுணர்கள் ஒப்பிடுகின்றனர். அன்று கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 139 டாலர் வரை உயர்ந்தது. அப்போது ஐந்து மாநிலத் தேர்தல்கள் நிறைவடைந்த பின்னர், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டது. வெறும் 16 நாட்களில் 14 முறை விலை உயர்த்தப்பட்டதால், லிட்டருக்கு 10 ரூபாய் வரை அதிகரித்தது. பின்னர் பொதுமக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு கலால் வரியைக் குறைத்து விலையைக் கட்டுப்படுத்தியது. தற்போதும் அதே போன்றதொரு சூழல் உருவாகும் அச்சம் நிலவுகிறது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள 3 ரூபாய் என்பது முதற்கட்ட உயர்வு மட்டுமே என்று அஞ்சப்படுகிறது.
குறிப்பாக, டீசல் விலை உயர்வு என்பது ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் விநியோகத் துறையையும் பாதிக்கும் காரணியாகும். டிராக்டர்கள், சரக்கு வாகனங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் தொழிற்சாலைகள் டீசலையே முதன்மை எரிபொருளாகக் கொண்டுள்ளன. இதனால் காய்கறி, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் மறைமுகமாக உயரும். எரிபொருள் நிறுவனங்களுக்கு தினசரி ஏற்பட்டு வந்த 1,000 கோடி ரூபாய் நஷ்டம், தற்போதைய விலை உயர்வுக்குப் பின் 500 கோடி ரூபாயாகக் குறைந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.








