CM விஜயிடம் 6 துறை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு அதிரடி கண்காணிப்பு.. டாஸ்மாக் முதல் பெண்கள் பாதுகாப்பு வரை 6 துறைகளுக்கு Special Monitoring Officers நியமிக்க முதலமைச்சர் விஜய் முடிவு

சென்னை , May 16: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு புதிய கண்காணிப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக, நிர்வாகக் குளறுபடிகளைத் தவிர்த்து, மாவட்ட அளவிலான அலட்சியங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. டாஸ்மாக், போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சமூக விரோதச் செயல்கள், வழக்கு பதிவுகள் கண்காணிப்பு மற்றும் பத்திரப்பதிவுத் துறை ஆகிய ஆறு முக்கிய துறைகளின் செயல்பாடுகளைக் காவல்துறை தலைமையகத்திலிருந்து நேரடியாகக் கண்காணிக்கும் வகையில், ‘சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள்’ (Special Monitoring Officers) நியமிக்கப்பட உள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே நிர்வாகக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை விஜய் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எவ்வித சமரசமும் இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள், கள்ளச்சந்தை மது விற்பனை, போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் அண்மைக்காலமாக விவாதப் பொருளாக மாறியுள்ள சூழலில், அவற்றை ஆரம்ப நிலையிலேயே வேரோடு கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய கண்காணிப்பு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள அமைப்பின்படி, உள்ளூர் அளவில் செயல்படும் எஸ்பிசிஐடி (SPCID) பிரிவினர் தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு விவகாரங்களைச் சேகரித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அல்லது சம்பந்தப்பட்ட டிஎஸ்பி அலுவலகங்களுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால், புதிய திட்டத்தின்படி இந்தத் தரவுப் பகிர்வு முறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளது. இனிமேல் உள்ளூர் உளவுத்துறை அதிகாரிகள் சேகரிக்கும் அனைத்துத் தகவல்களும், தினசரி அடிப்படையில் நேரடியாகக் காவல்துறை தலைமையகத்தில் அமர்த்தப்படும் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் காலதாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும்.
இந்த புதிய கட்டமைப்பில் டாஸ்மாக் கடைகள் மற்றும் கள்ளச்சந்தை மது விற்பனை மீதான கண்காணிப்பு மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட உள்ளது. இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறதா, எந்தெந்த பகுதிகளில் கள்ளச்சந்தை மது வியாபாரம் தடையின்றி நடக்கிறது மற்றும் எத்தனை சந்து கடைகள் இயங்குகின்றன போன்ற துல்லியமான விவரங்களை அந்தந்த பகுதி எஸ்பிசிஐடி அதிகாரிகள் தினசரி சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரிக்கப்படும் விவரங்கள் உடனடியாக தலைமையக அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட டிஐஜி மற்றும் ஐஜி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அதே இரவிலேயே கள நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவர். கள்ளச்சந்தை மது விற்பனை உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கடைகளை உடனடியாக மூடுவது மற்றும் அவற்றின் உரிமங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிகிறது.
இதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளுக்கு இந்த அமைப்பில் தனி கவனம் செலுத்தப்படவுள்ளது. தினசரிப் பதியப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற வழக்குகள் தற்போதைய நிலையில் எவ்வாறு உள்ளன, புலனாய்வு எந்த திசையில் நகர்கிறது, குற்றவாளிகளைக் கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது போன்ற ஒட்டுமொத்த விவரங்களும் இந்த சிறப்பு அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.
மறுபுறம், சமூக விரோதச் செயல்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளை உளவுத்துறை காவலர்கள் முன்கூட்டியே கண்டறிந்து உடனுக்குடன் தலைமையகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம், ஒரு சிறிய சட்டம் ஒழுங்குப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுப்பதற்கு முன்பாகவே, அதனைத் தொடக்க நிலையிலேயே முறியடிப்பது இந்த புதிய அமைப்பின் முதன்மை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை காவலர்களுடன் நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவிலேயே இந்த இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதுடன், இதற்கான தொடக்கக்கட்ட வழிகாட்டுதல்கள் காவல்துறைக்கு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.













