
சிறப்பு செய்தி : மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள சூழலில் ,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதல்கள் தங்களின் பொதுக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துள்ளதாக ஈரான் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது .இந்த கூட்டுத் தாக்குதல் நடவடிக்கை எதிரியின் நெறிமுறை வீழ்ச்சியையே காட்டுவதாக ஈரானின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ,ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே அமைந்துள்ள முக்கியப் பாலம் ,மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன .இந்த தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்கள் சிலரும் உயிரிழந்துள்ளதாக ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இராணுவ இலக்குகளைத் தாண்டி ,மருத்துவமனைகள் ,பள்ளிகள் மற்றும் மக்கள் அடர்த்தி மிகுந்த குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறும் ஈரான் ,இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது .மேலும் ,இந்தத் தாக்குதல்களால் தங்களின் வீரியத்தை ஒடுக்கிவிட முடியாது என்றும் ,சேதமடைந்த கட்டிடங்களை தங்களால் மீண்டும் புனரமைக்க முடியும் என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது .அதே நேரத்தில் ,இத்தகைய தாக்குதல்களால் உலக அரங்கில் அமெரிக்காவின் மதிப்பிற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்றும் ஈரான் வெளியுறவுத்துறை விவரித்துள்ளது.
தற்போதைய மோதல் போக்கு கடந்த 2026 பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலின் தொடர்ச்சியாகவே தீவிரமடைந்துள்ளது .இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ,ஈரான் தரப்பும் பல்வேறு நாடுகளுக்கு எதிராகத் தனது பதிலடி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இருதரப்புக்கும் இடையே நீடித்து வரும் இந்த நேரடி மோதல் நிலை உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதுடன் ,உலகப் பொருளாதாரத்தையும் மந்தநிலைக்குத் தள்ளியுள்ளது .குறிப்பாக சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் கடல்சந்தி (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளதால் ,சர்வதேச அளவிலான கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் முற்றிலும் முடங்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.








