நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது ! நெல்லை மாவட்டத்தில் உள்ள 60 குளங்களில், 8 குழுக்களாக 250 பேர் பங்கேற்பு

ஜனவரி 24, 2026 ; நெல்லையில் 16 வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சுமார் 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 8 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்….

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து ஓடினாலும் அதன் கிளை நதிகள் தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் செல்கிறது. இந்த நதிகளின் மூலம் பயன்படும் தாமிரபரணி வடிகால் குளங்களில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்கள் பறவைகள் ஆகியவை வாழ்ந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஏ ட்ரீ என்ற தன்னார்வ அமைப்புடன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை இணைந்து தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 16 வது தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு இன்றும் நாளையும் நெல்லை தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் பறவைகள் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என 250 பேர் கலந்து கொண்டுள்ளனர். 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது பறவைகளின் இனம், வசிப்பிடம், கூடுகள், எச்சம், உள்ளிட்டவைகள் மூலம் கணக்கெடுக்கப்படும். மேலும் பறவைகள் கணக்கெடுப்பு பதிவுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளில் பதிவு செய்து அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 70 வகையான சுமார் 24 ஆயிரம் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள சூழலில் நெல்லை மாநகர பகுதியில் உள்ள நயினார் குளத்திலும் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. தொலை நோக்கு கருவிகள் மூலம் நேரில் கண்டு பறவைகளை கணக்கீடு செய்தனர்.
நயினார்குளத்தில் 10 க்கும் மேற்பட்ட வகை பறவைகள் உள்ளது. இதில் நீலத்தலை கோழி, பாம்புதாரா, நீலசிறகு வாத்து, சென்டுவாத்து, மூக்கு தாரா, ஜம்புநாரை என பல்வேறு வகையான பறவைகள் காணப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு மழை பெய்து குளங்கள் நிரம்பியுள்ளதால் அதிக அளவில் பறவைகள் காணப்படுகிறது. சில வெளிநாட்டு பறவைகளும் குளங்களில் தென்படுகின்றன. கடந்த முறை கணக்கெடுப்பில் 70 வகையான 24 ஆயிரம் பறவைகள் தெரியவந்தது. இந்த ஆண்டு இது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »