நெல்லை , ஜூலை 2: நெல்லையில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பரபரப்பான தாக்குதல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், 3 பேருக்கு மொத்தம் 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முன்விரோதம் காரணமாக ஆபரணம் என்பவரின் வீட்டிற்குள் ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்தது. அங்கு இருந்த மதியழகன் (39) என்பவரை கொலை செய்யும் நோக்கத்துடன் பயங்கர ஆயுதங்களால் அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கியது. இந்த வன்முறைச் சம்பவத்தில் மதியழகனைத் தடுக்க முயன்ற திராவிட செல்வம் (45), தாசன் (30) ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு, நாங்குநேரி உதவி அமர்வு நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.
பாளையங்கோட்டை சிறை வாசலில் கைதி தப்பி ஓட்டம்… 2 போலீசார் சஸ்பெண்டு, 4 தனிப்படை தீவிர வேட்டை!
இந்த வழக்கை விசாரித்த நாங்குநேரி நீதிமன்ற நீதிபதி, கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். கீழமை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலில் காயமடைந்த திராவிட செல்வம் இந்த உத்தரவை எதிர்த்து நெல்லை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பின்னர் இந்த மேல்முறையீட்டு வழக்கு, விரிவான விசாரணைக்காக நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முன்னிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் எம்.கருணாநிதி ஆஜராகி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வலுவான வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதி செல்வம், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த விடுதலை உத்தரவை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றம் சாட்டப்பட்ட செல்வம், கோபி, தர்மராஜ் ஆகிய 3 பேரும் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 1,500 ரூபாயும், பயங்கர ஆயுதங்களால் தாக்கிய குற்றத்திற்காக தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 6 ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், அவர்கள் தலா ஒரு மாதம் சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் 4ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த தனபாலன் விசாரணை காலத்தில் இறந்துவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. அதேநேரம் வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான அன்பழகன், மதன், நவீன்ராஜ், சீனிவாசன் ஆகியோர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கொடூர தாக்குதலில் காயமடைந்த மதியழகன், திராவிட செல்வம் மற்றும் தாசன் ஆகிய 3 பேருக்கும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். 16 ஆண்டுகளாக நீடித்த இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பு நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






Great content! Keep up the good work!