புது டெல்லி , ஜூன் 30: இந்திய விமானப்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு இலகுரக போர் விமானமான ‘தேஜஸ் Mk1A’ இன் முதல் தொகுப்பு வரும் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. நடப்பு 2026 ஆம் ஆண்டிற்குள் மட்டும் 18 முதல் 24 போர் விமானங்களை விமானப்படையிடம் வழங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (HAL) தீவிரமாக இலக்கு நிர்ணயித்து வேலை செய்து வருகிறது. இதன் மூலம் தேஜஸ் Mk1A விமானங்களுக்கான இந்தியாவின் முதல் பிரத்யேக விமானப்படை ஸ்குவாட்ரன் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட உள்ளது.

அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் (GE Aerospace) நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய F404-GE-IN20 இன்ஜின்கள் கிடைப்பதில் ஏற்பட்ட உலகளாவிய விநியோகத் தட்டுப்பாடு காரணமாக இத்திட்டம் தொடக்கத்தில் சில பின்னடைவுகளைச் சந்தித்தது. எனினும் இன்ஜின் வருகைக்காகக் காத்திருக்காமல் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியைத் தொடர்ந்து மேற்கொண்டது. இதன் விளைவாக, சுமார் 30 தேஜஸ் Mk1A விமானங்களின் உடற்கட்டமைப்பு (Airframe) பணிகள் ஏற்கனவே முழுமையாகத் தயாராகிவிட்டன.
ALso : ₹6000 கோடி செலவழித்தும் திமுக தோல்வி – துரை வைகோவின் அதிர்ச்சி அரசியல் விமர்சனம்
120 எம்எல்ஏ ஆதரவு உறுதி… சரத் சர்ச்சை முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை CTR நிர்மல் குமார் அதிரடி விளக்கம்!
தற்போது இந்த விமானங்களில் இன்ஜின்களைப் பொருத்துவது மற்றும் இறுதி கட்டப் பறக்கும் சோதனைகளை நடத்துவது போன்ற இறுதிப் பணிகள் மட்டுமே எஞ்சி உள்ளன. சமீபத்தில் ஜிஇ நிறுவனம் முதற்கட்டமாக ஆறு இன்ஜின்களை இந்தியாவிடம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கூடுதலாக 20 இன்ஜின்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின்கள் வந்தடைந்தவுடன் அடுத்தடுத்து விமானங்கள் தயார் செய்யப்பட்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் திட்டமிட்டபடி 24 விமானங்கள் வரை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவிதுள்ளன .
பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும்போது முந்தைய பதிப்புகளை விட இந்த தேஜஸ் Mk1A போர் விமானம் பல்வேறு நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிநவீன ஏஇஎஸ்ஏ (AESA) ரேடார் தொழில்நுட்பம், நவீன மின்னணு போரமைப்பு (Electronic Warfare Suite), நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி (Mid-air Refueling) மற்றும் மிக நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளை ஏவக்கூடிய திறன் (BVR Missiles) உள்ளிட்ட பல முக்கிய மேம்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய விமானப்படைக்காக மொத்தம் 83 தேஜஸ் Mk1A விமானங்களை வாங்குவதற்காக 48,000 கோடி ரூபாய் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளது. இது தவிர மேலும் கூடுதலாக 97 விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஆரம்பகட்ட ஒப்புதலையும் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய போர் விமானங்கள் விமானப்படையில் இணைந்தவுடன், அவற்றை உடனடியாகப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்த ஏதுவாக தமிழ்நாட்டின் சூலூர் விமானப்படை தளத்தில் இரண்டு முழு ஸ்குவாட்ரன்களுக்குத் தேவையான விமானிகள் தங்களது சிறப்புப் பயிற்சிகளை ஏற்கனவே வெற்றிகரமாக முடித்துள்ளனர். இதனால் விமானங்கள் ஒப்படைக்கப்பட்ட உடனே எவ்வித தாமதமும் இன்றி அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர இந்திய விமானப்படை முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. இந்த உள்நாட்டுப் போர் விமானங்களின் வருகை நாட்டின் வான்வெளிப் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.





