நெல்லை , ஜூன் 29: நெல்லை மாவட்டத்தில் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பத்து வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் என்ற நடேசன் (63) என்பவர் மீது அப்போதைய காவல் ஆய்வாளர் கோகிலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் குற்றவாளியான சிதம்பரம் என்ற நடேசனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். அத்துடன் அவருக்கு 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடக்கம் முதலே துரிதமாகச் செயல்பட்டு நீதிமன்றத்தில் போதிய ஆதாரங்களை சமர்ப்பித்து குற்றவாளிக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தந்த காவல்துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிறப்பாகச் செயல்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி, முன்னாள் காவல் ஆய்வாளர் கோகிலா, தலைமை காவலர் துர்காதேவி மற்றும் அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.
நெல்லை மாவட்ட காவல்துறையினரின் தீவிர மற்றும் தொடர் நடவடிக்கையால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 13 போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 13 குற்றவாளிகளுக்குத் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனையும், மூன்று குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், இரண்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது மாவட்ட காவல்துறையின் சட்டரீதியான நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்வதே காவல்துறையின் முக்கிய நோக்கம் என்றும் அவர்களுக்கு எதிராக இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சற்றும் பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி இந்த தீர்ப்புக்குப் பின் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.





