தர்மபுரி , ஜூன் 28 : பாரம்பரிய விவசாய முறைகளில் இருந்து மாறுபட்டு புதிய நவதானிய மற்றும் தோட்டக்கலை பயிர்களை நோக்கி நகரும் தற்போதைய காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டம் அரியாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி நிஜாமுதீன் தனது ஏழு ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்தில் மேற்கொண்டு வரும் அதிநவீன பேரிச்சை சாகுபடி தற்பொழுது மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதே வேளாண் தொழிலில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் இவர் இந்தியாவில் முதல் முறையாக திசு வளர்ப்பு தொழில்நுட்பத்தின் மூலம் பேரிச்சை பண்ணை அமைத்து இப்பகுதியில் சாதனை படைத்துள்ளார்.

உலக அளவில் பேரிச்சம்பழத்தில் நூற்றுக்கணக்கான ரகங்கள் பயிரிடப்பட்டு வரும் சூழலில் நிஜாமுதீன் தனது பண்ணையில் மட்டும் சுமார் பதினாறு வகையான உயர்தர ரகங்களை மிக வெற்றிகரமாக வளர்த்து மகசூல் பெற்று வருகிறார். இதற்காக மரபணு மாற்ற முறையில் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட உயர்தர திசு கன்றுகளை அவர் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்துள்ளார். பொதுவாக இந்த வகையான திசு கன்றுகள் நடவு செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளில் முழுமையான மகசூலைத் தந்து ஒரு மரத்திற்கு இருநூறு கிலோவிற்கும் அதிகமாக விளைச்சலை வழங்கும் இயல்புடையவை ஆகும். ஆனால் வியப்பூட்டும் விதமாக அரியாகுளம் பண்ணையில் நடவு செய்யப்பட்ட இரண்டே ஆண்டுகளில் செடிகள் அனைத்தும் செழித்து வளர்ந்து தற்பொழுது அறுவடைக்கு தயாராகி உள்ளதாக விவசாயி நிஜாமுதீன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
Also : மகேந்திரகிரி இஸ்ரோ புதிய இயக்குநராக நாராயணன் அப்பு நியமனம்
பாம்புக்கடி சிகிச்சையில் தாமதம்? 19 வயது இளைஞர் உயிரிழப்பு… அரசு மருத்துவர் பணியிட மாற்றம்!
இங்குள்ள பெரும்பாலான பேரிச்சை செடிகள் தரைமட்டத்திலேயே நூறு கிலோ கணக்கில் கொத்துக் கொத்தாக காய்த்துப் பழுத்து தொங்குவது காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. சில குறிப்பிட்ட செடிகள் தரையிலிருந்து ஒரு அடி உயரத்திலும் இன்னும் சில செடிகள் அதிகபட்சமாக இரண்டு அடி உயரத்திலும் அடியில் தரை தொடும் அளவிற்கு மிக அபரிமிதமான விளைச்சலைக் கொடுத்துள்ளன. இந்த பண்ணையின் மற்றொரு தனிச்சிறப்பு என்னவென்றால் உலகளவில் மிக அரிய மற்றும் உயர்தர ரகமாக கருதப்படும் நூர் என்ற சிறப்பு பேரிச்சை ரகத்தையும் நிஜாமுதீன் இங்கு மிக வெற்றிகரமாக வளர்த்து வருகிறார். வழக்கமாக மற்ற விவசாயிகளுக்கு நாற்றுகளை விநியோகிக்கும் பொழுது அவை பலன் தருவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும் என்றே வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். ஆனால் அவரது சொந்த பண்ணை பராமரிப்பில் முறையான ஊட்டச்சத்து மேலாண்மை காரணமாக இரண்டே ஆண்டுகளில் இந்த நூர் ரகம் முழுமையான பலனைத் தந்துள்ளது.
பொருளாதார ரீதியாக இந்த நூர் ரக பேரிச்சம்பழத்தின் சந்தை மதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இதன் ஒரு பழத்தின் விலை மட்டுமே பதிமூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. முதல் அறுவடையிலேயே ஒரு செடியிலிருந்து ஐம்பது கிலோ முதல் நூறு கிலோ வரை தரமான பழங்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. இதன் மூலம் ஒரு செடியிலிருந்து மட்டும் முதல் கட்ட அறுவடையிலேயே குறைந்தது முப்பதாயிரம் ரூபாய் முதல் அறுபதாயிரம் ரூபாய் வரை நிகர லாபம் கிடைப்பதாக நிஜாமுதீன் கணக்கிட்டுக் கூறுகிறார். ஒரு ஏக்கர் பரப்பளவில் சராசரியாக நாற்பது முதல் ஐம்பது செடிகள் வரை நட்டு பராமரித்தால் ஒரு விவசாயிக்கு வருடத்திற்கு குறைந்தது பல லட்சம் ரூபாய்க்கு மேல் நிலையான வருவாய் இதன் மூலம் கிடைக்கிறது.
வழக்கமான பிற விவசாயப் பயிர்களைப் பயிரிடும் பொழுது விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களான தொடர்ச்சியான யூரியா உரப் பயன்பாடு மற்றும் தினசரி நீர் பாசனம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இந்த பேரிச்சை சாகுபடியில் இல்லை. இதனால் விவசாயிகளுக்கான உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவுகள் பெருமளவில் குறைகின்றன. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அறுவடைக்கு வரும் இந்த பயிருக்கு குறைந்த செலவில் மிக அதிக வருவாய் கிடைப்பது பெரும் சாதகமான அம்சமாகும். இந்த பண்ணையின் வெற்றியைப் பற்றி கேள்விப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான விவசாயிகள் அரியாகுளம் கிராமத்திற்கு ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். அவர்கள் இந்த திசு கன்றுகளின் வளர்ப்பு முறைகளை நேரடியாகக் கேட்டு அறிந்து தங்களது பகுதிகளுக்கும் பயிரிடுவதற்காக இந்த திசு நாற்றுகளை வாங்கிச் செல்கின்றனர்.
தோட்டக்கலைத் துறையின் பங்களிப்பு குறித்து பேசுகையில் கடந்த ஆட்சிக் காலங்களிலும் அதற்கு முந்தைய காலங்களிலும் இத்தகைய நவீன பேரிச்சை பயிர்களை தமிழகத்தில் பரவலாக்குவதற்காக அரசு தரப்பில் பல்வேறு மானியங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. அதேபோல் தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள புதிய அரசும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த லாபகரமான பேரிச்சை தொழிலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உரிய மானிய உதவிகளை வழங்கும் என்று விவசாய பெருமக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த விளைச்சலுக்கான சந்தை வாய்ப்புகள் குறித்து விவசாயி நிஜாமுதீன் விவரிக்கும் பொழுது அறுவடை செய்யப்படும் பழங்களை விற்பனை செய்வதற்காக சந்தைகளுக்கோ அல்லது தூரத்து நகரங்களுக்கோ எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் தங்களுக்கு ஏற்படுவதில்லை என்று கூறுகிறார். அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் நேரடியாகவே தங்களது தோட்ட தேடி வந்து பழங்களை நல்ல விலைக்கு கொள்முதல் செய்து கொள்கின்றனர். மற்ற பாரம்பரிய விவசாயத் தொழில்களைக் காட்டிலும் பேரிச்சை சாகுபடியில் உழைப்பிற்கேற்ற மிகச் சிறந்த லாபமும் பொருளாதாரப் பாதுகாப்பும் கிடைப்பதாக நிஜாமுதீன் தனது அனுபவப்பூர்வமான உண்மைகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.





