தென்காசி , ஜூன் 28: பாம்புக்கடிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் 19 வயது மகன் ஆகாஷ் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் ஆவார். கடந்த ஜூன் 3-ம் தேதி இரவு சுரண்டையில் உள்ள தனது உறவினர் சின்னத்துரை என்பவருடன் ஆகாஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரையும் கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது.
ராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயம்… கிணற்றில் சடலமாக மீட்பு!
ஆரம்பத்தில் தங்களை பாம்பு கடித்த விபரம் அறியாத இருவரும் நள்ளிரவில் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் இருவரையும் உடனடியாக வீரகேரளம்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மருத்துவமனையின் முதன்மை நுழைவுவாயில் பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஊழியர்கள் யாரும் இல்லாததால் தாமதிக்காமல் அவர்களை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் இதே நிலை நீடித்ததாக அதாவது மருத்துவமனை நுழைவுவாயில் மூடப்பட்டிருந்ததாக உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்ட இந்த அடுத்தடுத்த காலதாமதத்தைத் தொடர்ந்து ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிரப் பரிசோதனை செய்ததில் இருவரையும் கட்டுவிரியன் பாம்பு கடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாம்பின் வீரியம் அதிகமாக இருந்ததால் உடனடியாக அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சிகிச்சை பெற்று வந்த உறவினர் சின்னத்துரை தொடர் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாகக் குணமடைந்தார்.
இந்தச் சோகச் சம்பவம் குறித்து உயிரிழந்த ஆகாஷின் தந்தை கிருஷ்ணன் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சுரண்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவசர கால நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனை நுழைவுவாயில் திறக்கப்படாமல் அலட்சியமாக இருந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வீரகேரளம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த மருத்துவர் ஆனந்தராஜா, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் சித்ரா பிறப்பித்துள்ளார். அவசர சிகிச்சைக்கான கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.





