சென்னை , ஜூன் 26:சென்னை அனக்காப்புத்தூர் பகுதியில் பெண் ஒருவர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடிக்கப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை காவல் துறையினர் பெங்களூரில் வைத்து கைது செய்துள்ளனர்.

சென்னை அனக்காப்புத்தூர் பகுதியில் வசித்து வந்த ரேஷ்மா என்ற பெண் சில தினங்களுக்கு முன்பு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளி ரேஷ்மாவின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து அவர் நிலைகுலைந்த பிறகு சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளியைப் பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த கொடூரக் கொலை வழக்கில் தனிப்படை காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெங்களூரில் மறைந்திருந்த முக்கிய சந்தேக நபர் தற்போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை சென்னைக்கு அழைத்து வந்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் ரூ.284 கோடி நடைபாதை டெண்டர் தமிழக அரசு ரத்து: முறைகேடு புகாரால் அதிரடி
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட ரேஷ்மா பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கும் அசோக் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேஷ்மா அவரைப் பிரிந்து கடந்த இரண்டு மாதங்களாகத் தனது மகளுடன் சென்னை அனக்காப்புத்தூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அவர் தனது கணவருடன் மீண்டும் இணைந்து வாழ மறுத்ததே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் கைது செய்யப்பட்டுள்ள நபர் ரேஷ்மாவின் கணவரா அல்லது அவருக்கு நெருக்கமான வேறு நபரா என்பது குறித்தும் கொலையின் பின்னணியில் உள்ள முழுமையான காரணங்கள் குறித்தும் சங்கர் நகர் போலீசார் முறைப்படியான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சென்னைக்கு அழைத்து வரப்படும் அந்த நபரிடம் நடத்தப்படும் முழுமையான விசாரணைக்குப் பிறகே இந்த வழக்கில் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





