சென்னை , ஜூன் 22: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆதாரமற்ற ஒற்றை வரிப் புகாரைக் கூறிவிட்டு உண்மை தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் அவையிலிருந்து ஓடிவிட்டதாகத் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டை விட்டு அண்டை மாநிலங்களுக்குச் சென்ற பெருநிறுவனங்களின் பட்டியலையும் அதற்கான காரணங்களையும் புள்ளிவிவரங்களுடன் அடுக்கினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஓட்டம்; அமைச்சர் அதிரடி
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “இன்றைய சட்டசபை நிகழ்வில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு வரியில் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்திவிட்டு திடீரென கிளம்பி ஓடிவிட்டார். அவர் சொன்னதெல்லாம் முற்றிலும் பொய் என்பது நாங்கள் ஆதாரங்களை நிரூபிக்கும்போது வெளியாகிவிடும் என்ற பயத்தில் மற்ற உறுப்பினர்களையும் எழுப்பி கூட்டாக வெளியேறிவிட்டனர். எங்களை விளக்கம் அளிக்கக் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை,” என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இருந்து தொழில் முதலீடுகள் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். “ஆந்திரா மற்றும் இதர அண்டை மாநிலங்களுக்குத் தொழில்கள் போய்விட்டதாகப் பொய்ப் பரப்புரை செய்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில்தான் பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறின,” என்றார்.
TN Assembly : கோவில் நிதி விவகாரம்: பேரவையில் தவெக – திமுக இடையே காரசார விவாதம்
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு இழப்பு
திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தொழில் இழப்புகள் குறித்து அமைச்சர் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:
- இழந்த திட்டங்கள்: கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் மட்டும் தமிழகம் 25 முக்கிய முதலீட்டுத் திட்டங்களை அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்துள்ளது.
- முதலீட்டு மதிப்பு: இந்த 25 திட்டங்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 3.3 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
- வேலைவாய்ப்பு இழப்பு: இதன் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். இந்த முதலீடுகள் மூலம் குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்கள் பெரும் பயனடைந்துள்ளன.
மாநில வாரியாக வெளியேறிய பெருநிறுவனங்களின் பட்டியல்
2024ஆம் ஆண்டின் தரவுகளைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் “இந்த வரைபடத்தைப் (Graph) பாருங்கள். 2024 இல் மட்டும் எவ்வளவு திட்டங்களைத் தமிழகம் இழந்துள்ளது என்பது இதில் துல்லியமாகத் தெரிகிறது. முந்தைய ஆட்சியில் 2.23 சதவீத முதலீடுகள் கைவிட்டுப் போயுள்ளன,” என்று கூறி பின்வரும் பட்டியலை ஆதாரமாக முன்வைத்தார்:
| ஆண்டு | நிறுவனம் | சென்ற மாநிலம் | துறையின் விவரம் |
| 2024 | டாடா எலக்ட்ரானிக்ஸ் | குஜராத் | செமிகண்டக்டர் ஃபேப் (Semiconductor Fab) |
| 2024 | ஜே.எஸ்.டபிள்யூ குரூப் | ஒடிசா | இவி பேட்டரி மற்றும் உருகாலை (EV Battery & Smelting) |
| 2024 | சுசுகி மோட்டார் | குஜராத் | ஆட்டோமொபைல் (Automobile) |
| 2024 | மைக்ரான் டெக்னாலஜி | குஜராத் | ஏடிஎம்பி (ATMP) |
| 2024 | டொயோட்டா மோட்டார் | மகாராஷ்டிரா | ஆட்டோமொபைல் உற்பத்தியகம் |
திமுக கால ஊழல்களால் ஓடிய நிறுவனங்கள்; எஃப்ஐஆர் பாயும்
முதலீடுகள் வெளியேறியதற்கான காரணங்களை விளக்கிய அமைச்சர், “திமுக ஆட்சியில் நிலவிய கடுமையான காலதாமதமும், மிரட்டி வாங்கப்பட்ட லஞ்சமுமே இதற்குக் காரணம். அப்போதைய துறை அமைச்சருடன் நிழல் அமைச்சராகச் செயல்பட்ட அவரது தம்பியின் தலையீட்டால் அடுக்கடுக்கான ஊழல்கள் நடந்தன. சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) வாங்குவதற்குக் கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலைதான் இருந்தது. இதனால் பொறுமையிழந்த நிறுவனங்கள் வேறு மாநிலங்களைத் தேடி ஓடின,” என்று குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் பரபரப்பு! Protocol விவகாரத்தில் சபாநாயகர் அதிரடி உத்தரவு – என்ன நடந்தது?
இதுதொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, “கண்டிப்பாக ஊழல் புகார்கள் மீது எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யப்பட்டு முறையான வழக்கு விசாரணை நடத்தப்படும். அதற்கான முதற்கட்ட பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். எங்களுக்குச் சற்று கால அவகாசம் கொடுங்கள், அனைத்தையும் சரிசெய்து வருகிறோம்,” என்று உறுதியளித்தார்.
21 நாட்களில் ஒற்றைச் சாளர அனுமதி
“முந்தைய அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளில் ஒற்றைச் சாளர முறை (Single Window System) என்பது வெறும் காகித அளவிலேயே இருந்தது. ஆன்லைன் என்று கூறினாலும் கோப்புகள் நகராமல் நேரடியாகப் பணம் வாங்குவதற்கே அந்த அமைப்பைப் பயன்படுத்தினர். ஆனால் எங்கள் அரசு இதனை முழுமையாக மாற்றி அமைக்கிறது. லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கில், விண்ணப்பித்த 21 நாட்களுக்குள் அனைத்து அனுமதிகளும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படும் ’21-Days Approval System’ என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்,” என்றார்.
ராயல் என்பீல்டு மற்றும் மெசகான் டாக்குடன் பேச்சுவார்த்தை
தமிழக அரசு புதிய முதலீடுகளை ஈர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிறுவனங்களின் காலவரிசைப் பட்டியலை (Timeline) வாசித்துக் காட்டினார்:
- செப்டம்பர் 19, 2025: முந்தைய திமுக ஆட்சியின் இறுதிப் பகுதியில் மெசகான் டாக் (Mazagon Dock) நிறுவனம் மற்றும் கொச்சின் ஷிப்யார்ட் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகின.
- நவம்பர் 20, 2025: தூத்துக்குடியில் முதலீடு செய்வதற்கான பொது அறிவிப்பை இந்நிறுவனங்கள் வெளியிட்டன.
- டிசம்பர் 7, 2025: ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் தமிழக அரசுடன் பிரத்யேக ஒப்பந்தம் செய்தது.
- டிசம்பர் 26, 2025: ஹூண்டாய் ஒப்பந்தம் முடிந்த 19 நாட்களில், மத்திய அரசின் எஸ்டிபிஎஸ் (SDPS) வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டன.
- ஜனவரி 2026: அடுத்த 38 நாட்களில் ஹூண்டாய் எஸ்டிபிஎஸ் டிஎன் எஸ்பிவி (TN SPV) நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
செய்தியாளர்களின் தொடர் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, “நாங்கள் சும்மா இருக்கவில்லை. தமிழகத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டிருந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்திடம் நான் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசி அவர்களை இங்கேயே தக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளேன். அதேபோல் மெசகான் டாக் நிறுவனத்துடனும் தொடர்ந்து பேசி வருகிறோம். மோதிலிங் மற்றும் ஹியூ சாங் ஆகிய இரு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது,” என்று தெளிவுபடுத்தினார்.
சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதமும் அமைச்சர் ராஜ் மோகன் பதிலடியும்
புதிய கமிட்டி ஏன்? எம்எஸ்எம்இ பாதிப்புக்குத் தீர்வு
தலைமைச் செயலாளர் (CS) தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டிருப்பது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “ஏற்கனவே ‘கைடன்ஸ்’ (Guidance Tamil Nadu) அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அது தொடர்ந்து இருக்கும். அதற்கு முட்டுக்கட்டைப் போடாமல், கூடுதல் பலம் சேர்க்கவும், இன்னும் வேகமாகத் திட்டங்களைச் செயல்படுத்தவுமே தலைமைச் செயலாளர் தலைமையில் இந்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சிக் கால விசுவாசிகள் இன்னும் அதிகாரத்துவத்தில் ஆதிக்கம் செலுத்துவதால்தான் இந்த நிர்வாக மாற்றங்கள் தேவைப்படுகின்றன,” என்றார்.
மின்வெட்டு காரணமாகக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) சந்தித்து வரும் உற்பத்திப் பாதிப்புகள் குறித்த கேள்விக்கு “மின் தட்டுப்பாட்டைச் சீரமைக்கத் தேவையான போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் MSME துறையினரின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும்,” என்று கூறி அமைச்சர் தனது பேட்டியை நிறைவு செய்தார்.





