திருநெல்வேலிc, ஜூன் 22: : தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த 52 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அவரது கட்சியினராலும் ரசிகர்களாலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருநெல்வேலி மாநகரப் பகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிறப்புப் பாராட்டு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தின் நெல்லை வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் மரிய ஜான் தலைமையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அண்மையில் வெளியான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முதல்வர் விஜய் பிறந்தநாள்: நெல்லையில் தவெக சார்பில் 1000 பேருக்கு அன்னதானம்
விழாவில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 52 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பள்ளிப் படிப்புக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அடங்கிய சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குத் தங்களது படிப்பைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகளுடன் கூடிய சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கல்வி உதவிகளைத் தொடர்ந்து எளிய குடும்பங்களைச் சேர்ந்த 52 பெண்களுக்கு வீட்டு உபயோகத்திற்குத் தேவையான அரிசி பைகள் மற்றும் அத்தியாவசியப் பலசரக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்பும் இந்த விழாவில் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். கல்வியில் சாதித்த மாணவர்களைப் பாராட்டி, எளிய மக்களுக்கு நேரடியாக உதவும் வகையில் இந்த பிறந்தநாள் விழா நெல்லையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.





