சென்னை , ஜூன் 22: தமிழகத்தில் உள்ள அபாயகரமான தொழிற்சாலைகளை உடனடியாக குழு அமைத்து ஆய்வு செய்ய முதலமைச்சர் C. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஷ் பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்து அமைச்சர் பேசியதாவது:
தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக இதுவரை அங்கு பணியில் இருந்த 70 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 74 நபர்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 15 நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும் 27 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் 27 நபர்கள் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சட்டசபையில் பரபரப்பு! Protocol விவகாரத்தில் சபாநாயகர் அதிரடி உத்தரவு – என்ன நடந்தது?
இவ்விபத்தில் துரதிர்ஷ்டவசமாக ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு முதலமைச்சர் மிகவும் வேதனை அடைந்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர்களின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி நல்லடக்கம் செய்வதற்கான முழுச் செலவினையும் அரசே மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீடு திட்டம் (ESI) மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF) ஆகியவற்றை உடனடியாக வழங்கிடவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விபத்து குறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையினை 24 மணி நேரத்திற்குள்ளாகவும் முழுமையான விசாரணை அறிக்கையை மூன்று நாட்களுக்குள்ளும் சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு அபாயகரமான தொழிற்சாலைகளை (Hazardous Industries) உடனடியாக குழு அமைத்து ஆய்வு செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது தமிழகம் முழுவதும் மொத்தம் 54,957 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 27 லட்சத்து 65 ஆயிரத்து 313 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மொத்த தொழிற்சாலைகளில் 6,669 தொழிற்சாலைகள் அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று பேரவை வாயிலாக அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னதாக பேரவை அலுவல் ஆய்வு குழு எடுத்த முடிவின்படி தான் சபை நடவடிக்கைகள் அமையும் என்றும் அதற்கு மீறி நடக்க முடியாது என்றும் உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக அமருமாறும் பேரவைத் தலைவர் அறிவுறுத்தினார். அதன் பின்னரே அமைச்சர் இந்த விளக்க உரையினை வாசித்தார்.





