சென்னை ,ஜூன் 19: தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரை மீதான தீர்மானத்தின் மீது விறுவிறுப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா ஆளுநர் உரையில் சிறுபான்மையினர் நலன் குறித்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஜவாஹிருல்லா ஆளுநர் உரையின் போதாமைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். குறிப்பாகச் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் சார்ந்த எந்தவொரு ஆக்கப்பூர்வமான புதிய திட்டங்களோ அல்லது அறிவிப்புகளோ இந்த உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையின் கீழ் இதுவரை பயன் அடைந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று மிக முக்கியமான கோரிக்கையை பேரவையில் வலியுறுத்தினார்.
மேலும் பக்ரீத் பண்டிகையின் போது விலங்குகளைப் பலியிடக் கூடாது என்று அண்மையில் வந்துள்ள தீர்ப்பு குறித்துத் தனது உரையில் அடிக்கோடிட்டுக் காட்டிய ஜவாஹிருல்லா இதற்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். இந்தத் தீர்ப்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாட்டு உரிமை சார்ந்தப் பிரச்சைனையாக மட்டுமே சுருக்கப்பட்டுவிடக் கூடாது என்றும் இதனால் எதிர்காலத்தில் பாரம்பரியமாகக் கோயில்களில் விலங்குகளைப் பலியிடும் நடைமுறைகளுக்கும் கூடப் பெரிய அளவில் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் உருவாவதற்கு வழிவகுத்துவிடும் என்றும் எச்சரிக்கும் விதமாகத் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.
இதற்கிடையே சட்டப்பேரவை வளாகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது வக்ஃப் வாரியம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இஸ்லாமியர் அல்லாதவர்கள் வக்ஃப் வாரியத்தில் இருக்கக் கூடாது என்ற கோரிக்கை மற்றும் நிரந்தரமான முதன்மைச் செயல் அலுவலர் நியமனம் குறித்தான அரசின் நிலைப்பாட்டை விளக்கினார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்ப்பதே இந்த அரசின் கொள்கை என்றும் அதற்கான சட்டப் போராட்டங்களை இந்த அரசு நிச்சயமாக மேற்கொள்ளும் என்றும் அவர் அப்போது உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் யாரும் உடனடியாகப் பதில் சொல்வதில்லை என்றும் அவை பதிவாவதில்லை என்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஷாஜகான் தற்போதைய கூட்டத்தொடர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமாக மட்டுமே நடைபெற்று வருகிறது என்றார். அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள துறை வாரியான மானியக் கோரிக்கைகளின் போதும் நிதிநிலை அறிக்கை விவாதங்களின் போதும் உறுப்பினர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்குத் தகுந்த விளக்கங்களும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் நிச்சயமாக வெளிவரும் என்று அவர் குறிப்பிட்டார்.
வக்ஃப் விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்திலேயே விரிவாகப் பேசுவதற்கு உங்களுக்கு ஒரு நிமிடமாவது பேரவைத் தலைவர் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் அல்லவா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் காலத்தின் அருமையைக் கருதியும் அவையின் நேர மேலாண்மையைக் கருத்தில் கொண்டும் பேரவைத் தலைவர் அவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்று கூறினார். இருப்பினும் இந்த விவகாரத்தில் எங்களுடைய ஆதரவை ஏகமனதாக அவையில் உள்ள அனைவருமே தெரிவித்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தமிழ்நாட்டுச் சட்டமன்றப் பேரவையில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானமாகவே பேரவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு இருக்கக்கூடிய அத்தனை கட்சிகளின் உணர்வுகளையும் உள்ளடக்கிக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தான் அது என்பதால் இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழுமையாக வரவேற்கிறது. அரசு இதற்காக எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எப்போதும் முழுமையாகத் துணை நிற்கும் என்றும் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஷாஜகான் அண்டை மாநில நீர் விவகாரமான மேகதாது அணைப் பிரச்சனைக்கு எதிராகத் தமிழக முதல்வர் விஜயின் சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார். சட்டமன்றத்தில் தங்களுக்கு முறைப்படி பேசுவதற்குப் போதிய வாய்ப்பு அளிக்கப்படாவிட்டாலும் கூட தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதால் முதல்வரின் இந்தத் தீர்மானத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாகத் தங்களது ஆதரவை முழுமையாக வழங்குவதாகத் தெரிவித்து அமைச்சர் ஷாஜகான் தனது செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.





